• கிஜ் ஜான்ஸன்
  • தமிழில்: தமிழ்மகன்

 

 

1
எய்மி செய்யும் மிகப் பெரிய சாகஸம் 26 குரங்குகளை மேடையில் காணாமல் போகச் செய்வதுதான்.

2
பார்வையாளர்களின் முன்னிலையில் ஒரு ‘பாத் டப்’பை நகர்த்தி வைத்து யாரேனும் ஒருத்தர் மேடைக்கு வந்து அதை பார்வையிடுமாறு அவள் கேட்டுக் கொண்டாள். சிலர் ஏறி வந்து பாத் டப்பின் அடிப்புறத்தை நோக்கினர். அடிப்புறத்தின் எனாமல் பூசிய பகுதியைத் தொட்டும் கைகளால் உள்புறத்தை துழாவியும் பார்த்தனர். இது முடிந்ததும் மேடையின் மேலே இருந்து நான்கு சங்கலிகள் கீழே இறங்கியது. டப்பின் உதட்டுப் பகுதிகளில் இருக்கும் துளைகளில் சங்கலிகள் பூட்டியானதும் எய்மி  தரும் ஜாடைக்குப் பின் பத்தடி உயரத்துக்கு பாத் டப் மேலே அந்தரத்தில்  இழுத்துக் கட்டப்படும்.

அதன் மீது ஏணி ஒன்றைச் சாய்த்து வைப்பாள். அவள் கை தட்டியதும் 26 குரங்குகளும் மேடைக்கு ஓடிவரும். ஒவ்வொன்றாக ஏணியில் ஏறி பாத் டப்புக்குள் தாவி குதிக்கும். குரங்குகளின் குதிப்புக்கு ஏற்ப பாத் டப்பின் ஊசலாட்டம் இருக்கும். பார்வையாளர்களால் குரங்குகளின் தலை, கால், வால் போன்றவற்றைப் பார்க்க முடியும். ஆனால் ஒவ்வொரு முறை குரங்கு தாவி குதித்தும் அது ஆடி அடங்குவதையும் காணலாம். எப்போதும் கடைசியாக ஏணியில் ஏறும் குரங்கு ஸெப். அது மார்பில் அறைந்தபடி ஏற்படுத்தும் கூக்குரல் அரங்கத்தை நிறைக்கும்.

பிறகு அரங்கத்தில் பரவும் விளக்கு வெளிச்சத்தில் பாத் டப்பின் இரண்டு சங்கலிகள் மட்டும் கீழே இறக்கப்படும். பாத் டப் அதன் உட்புறத்தைக் காட்டியபடி சரிந்து தொங்கும்.
காலி.

3
அவர்கள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு தங்கள் டூர் பஸ்ஸுக்குத் திரும்புவார்கள். அதில் சிறிய கதவு. சில மணி நேரங்களுக்கு முன் காலையில் குரங்குகள் அதில் நுழைந்து தனியாகவோ கூட்டமாகவோ குழாயில் தண்ணீர் பிடித்தன. அப்போது ஒரே நேரத்தில் தண்ணீருக்கு போட்டிபோடும்போது தண்ணி அடித்துவிட்டு அறைக்குத் திரும்பிய கல்லூரி மாணவர்களின் கூச்சல் போல இருக்கும். சில ஷோபாவில் தூங்கி வழிந்து கொண்டிருக்கும், ஏதாவது ஒன்றாவது மெத்தையில் படுத்திருக்கும், பல குரங்குகள் இலக்கு ஏதுமின்றி தங்கள் கம்பிக் கூண்டுக்குத் திரும்பி வந்திருக்கும். அவற்றின் போர்வைகளையோ மென் பொம்மைகளையோ மாற்றியமைக்கும் வேளைகளில் உறுமிக் கொண்டிருப்பவை அதன் பின் நிம்மதிப் பெருமூச்சுடன் குறட்டைவிட ஆரம்பிக்கும். அவை எல்லாம் உள்ளே சென்று அடங்கும் வரை எய்மியால் உண்மையில் உறங்க முடிவதில்லை.

பாத் டப்புக்குள் அவற்றுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எய்மிக்கு எந்த யோசனையும் இல்லை, அல்லது அவை எங்கே செல்கின்றன என்றோ, மீண்டும் அவை திரும்பி வரும் அந்த சிறிய கதவு திறக்கப்படும் முன்புவரை என்ன நடக்கிறது என்றோ. அது அவளை மிகவும் தொல்லைபடுத்திக் கொண்டிருந்தது.

4
எய்மி இந்த நிகழ்ச்சிகளை மூன்றாவது ஆண்டாக நிகழ்த்துவதற்கான அனுமதி பெற்றிருந்தாள். சால்ட் லேக் ஏர்போர்ட்டில் இருந்து விமானங்கள் பறக்கும் பாதையின் கீழே அமைந்திருந்த மாதவாடகை அடுக்குமாடிக் குடியிருப்பில் அவள் இருந்தாள். ஏதோ ஒன்றால் மென்று, தமக்குள் ஏற்பட்ட குழி, இப்போது கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பதுபோல ஒரு வெறுமையை உணர்ந்தாள்.

உட்டா மாகாணக் கண்காட்சியில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போதுதான் அவளுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இந்த நிகழ்ச்சியை வாங்கி நடத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஏதற்காக அப்படியொரு யோசனை தோன்றியது அவளுக்குத் தெரியாது, நேராக அந்த முதலாளியிடம் சென்று “நான் இதை வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்’’ என்றாள்.

அவரும் உடனே சம்மதித்தார். இந் நிகழ்ச்சியை அவர் ஒரு டாலருக்கு விற்றார். இதே விலை கொடுத்துதான் நான்காண்டுகளுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியைத் தாம் வாங்கியதாகவும் தெரிவித்தார்.

ஒப்பந்தம் எல்லாம் கையெழுத்தாகி முடிந்த பின், “எப்படி முடிந்தது? இவற்றைப் பிரிவதால் உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லையா?’’ என்று கேட்டாள்.

“பாருங்கள், இது தனிப்பட்ட விவகாரம்தான். அவை என்னைப் பிரிந்து ஏங்கும். நான் அவற்றைப் பிரிந்து ஏங்குவேன். ஆனால் இதுதான் தருணம், அவற்றுக்கும் இது தெரியும்‘’ என்றார் அவர்.

தன் புது மனைவியுடன் சேர்ந்து சிரித்தார். அவருடைய இளம் மனைவியின் ஒரு கையில் ஒரு வெர்வெட் குரங்கு தொங்கிக் கொண்டிருந்தது. “நாங்கள் ஒரு தோட்டத்தை வாங்கத் தயாராகி விட்டோம்‘’ என்றாள்.

அவர் சொன்னது சரிதான். குரங்குகள் அவரைப் பிரிந்து ஏங்கிப் போய்விட்டன. ஆனால் இவளை வரவேற்கவும் செய்தன. ஒவ்வொரு குரங்கும் இவளிடம் நாகரீகமாக கைகொடுத்து இப்போது அவள் வைத்திருக்கும் பஸ்ஸுக்குள் ஏறிக் கொண்டன.

5
எய்மியிடம் 19 ஆண்டு டூர் பஸ் ஒன்று குரங்குகளுக்கான கூண்டுகளோடு இருந்தது. அதில் பச்சைக்கிளிக்கானது போன்ற அளவில் இருந்து (இது வெர்வெட்டுக்கானது) மக்காக் வகை குரங்குக்கான படுக்கையோடு கூடிய கூண்டுவரை இருந்தன. குரங்குகள் பற்றி புத்தகங்கள் அடங்கிய அலமாரி. பபூன் குரங்குகளின் பரிணாமமும் சுற்றுச் சூழலும், நிகழ்ச்சி நடத்துவதற்கான சம்பிரதாயமான பொருள்கள், ஒரு தையல் மிஷின், கோல்ஃப் விளையாட்டுக்கான சமாசாரங்கள், சில ஆண்டுகளுக்கு முன் அச்சடித்த ‘24 குரங்குகள்! படுகுழியை நோக்கி’ என்ற போஸ்டர்கள் ஒரு கற்றை, பழுதான ஒரு பச்சைநிற சோபா, மற்றும் குரங்குகளுக்கு உதவ ஒரு பாய் ஃப்ரண்ட்.

இவற்றை எதையாவது ஒன்றையேனும் எதற்காகச் சுமக்கிறோம் என்பதை அவளால் சொல்ல முடியாது. அது அவளுடைய பாய் ஃப்ரண்டாக இருந்தாலும்.  அவன் பெயர் கியோஃப். அவனை அவள் ஏழு மாதங்களுக்கு முன் பில்லிங்க்ஸில் சந்தித்தாள். எய்மிக்கு எங்கிருந்து எவ்வளவு கிடைக்கும் என்பதில் எந்த யோசனையும் இல்லை. எதிலும் தொடர்ச்சியான அர்த்தம் இருப்பதாகவும் தோன்றவில்லை. இருந்தாலும் அவள் நம்பிக்கை வைப்பதை நிறுத்த முடியாமல் இருந்தாள்.

அந்த பஸ் குரங்குகளால் நிரம்பியிருப்பதால் எப்போதும் குரங்குகளால் ஆன வாசனையாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். நிகழ்ச்சி முடிந்ததும் பாத்டப் சாகஸத்துக்குப் பின், அதே சமயம், குரங்குகள் வந்து சேரும் முன், சின்னமோன் வாசனை இதில் முகிழ்க்கும். அந்த டீயைத்தான் எய்மி சமயங்களில் குடிப்பாள்.

6
செயல்பாடுகள் என்று எடுத்துக் கொண்டால், குரங்குகளால் சாகஸம் செய்ய முடிகிறது, உடை உடுத்திக் கொண்டு ஹிட்  படங்களில் – இதில் மேட்ரிக்ஸ் திரைப்படம் பிரபலம் – தோன்றச் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்தி நடிக்க வைக்கலாம். மனிதக் குரங்குகள், சிங்கவால் குரங்குகள், கோலோபஸ்கள் போன்றவை பழக்குவதற்கு எளிமையானவை. வயதான பேங்கோவை சிவப்பு ஜாக்கெட் அணிவித்து கையில் ஒரு சவுக்கும் கொடுத்து சிம்மாசனத்தில் உட்கார வைக்கலாம். சிம்பன்ஸியை (அதன் பெயர் மிமி, அது குரங்குவகை இல்லை) கை சாதுர்யங்கள் நிறைந்த விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தலாம். அவள் அத்தனை சிறப்பாகச் செய்யக் கூடியவள் இல்லையென்றாலும் காதில் பூ சுற்றுவதில் திறமையானவள்.

குரங்குகளால் மர நாற்காலிகள் மற்றும் கயிறுகளைக் கொண்டு பாலம் அமைக்கவும், தங்கள் பெயர்களைப் பலகையில் எழுதிக் காட்டவும் முடியும்.

குரங்கு நிகழ்ச்சி இந்த ஆண்டில் 127 காட்சிகளை நிகழ்த்தி, மைய மேற்கத்திய நாடுகள் முதல் சமவெளி பிராந்தியங்கள் வரை மிகவும் பிரபலமடைந்துவிட்டது. எய்மியால் இன்னும்கூட அதிகமாக நிகழ்ச்சிகள் நடத்த முடியும், இருப்பினும் கிருஸ்துமஸை முன்னிட்டு இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டாள்.

7
இது பாத் டப் நிகழ்ச்சி:

எய்மி பளபளவென மின்னும் கத்திரிப் பூ நிறத்தில் சிக்கென உடையணிந்து மாயாஜாலம் செய்வாள். ஆழ் நீல நிறத்தில் ஒளிரும் மேடையில் நட்சத்திரம் மின்ன தோன்றுவாள். குரங்குகள் அவளுக்கு முன் வரிசையாக நிற்கும்.  அவள் சொல்வதற்கேற்ப அவை ஆடைகளைக் கழற்றி மடித்து வைக்கும். ஸெப் குரங்கு ஒரு மூலையில் நாற்காலியில் அமர்ந்தபடி நிழலான தோற்றத்தில் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்.

அவள் கைகளை உயர்த்துவாள்.

“இந்தக் குரங்குகள் உங்களை சிரிக்க வைக்கும் பிரமிக்க வைக்கும். உங்களுக்காக ஆச்சர்யங்களையும் ஜாலங்களையும் நிகழ்த்தும். இதன் கடைசி அங்கம் வித்தியாசமானது, பிரம்மாண்டமானது’’

அவள் கைகளை சட்டென விரித்ததும் திரைவிலகி பாத் டப் மேடையில் தெரியும். அவள் அந்த பாத் டப்பின் வளைந்த விளிம்புகளில் கையால் தடவியபடிசுற்றிவருவாள்.

“சிறிய விஷயம்தான், இது பாத் டப். எந்த வகையிலும் சாதாரணமானதுதான். காலைச் சிற்றுண்டிபோல எளிமையானது. சில நிமிடங்களில் உங்களில் ஒருவரை மேடைக்கு அழைத்து இதை உங்களுக்கு உறுதிப்படுத்துவேன்’’

“ஆனால் இதில் குரங்குகளும் மேஜிக் வஸ்துகளாக இருக்கும். இதில் இறங்கி பயணிக்கும். எங்கே செல்கின்றன என்று யாருக்கும் தெரியாது. எனக்கும்தான்’’ சற்றே தாமதித்து “குரங்குகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது. அவை இதை யாரிடமும் பகிர்ந்து கொள்வதுமில்லை’’

பிறகு பாத் டப் சோதனை முடிந்து பார்வையாளரிடம் “தங்கள் ரகசியப் பயணத்தை முடித்துக் கொண்டு அவை திரும்புவதற்கு சில மணி நேரங்கள் ஆகும்‘’ என்றபடி பார்வையாளர்களிடம் இருந்து கைதட்டலைக் கேட்பாள். குரங்குகளை வரிசையாக அனுப்பி வைப்பாள்.

8
எய்மியின் குரங்குகள்:

2 சியாமாங்குகள், இவை ஜோடிகள்.

2 அணில்வால் குரங்குகள். இவை மிகவும் சுறுசுறுப்பானவை.

2 வெர்வெட்டுகள்.

ஒரு குயினான், இது கர்ப்பமாக இருக்கிறது என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இது எப்படி நிகழ்ந்ததென்று எய்மிக்கு புரியவில்லை.

3 ரிஸஸ் குரங்குகள். அவை மோசடி வித்தைகளில் ஓரளவுக்குத் தேர்ந்தவை.

ஒரு வயதான கபுச்சின் பெண் குரங்கு, பெயர் பேங்கோ.

ஒரு மக்காக், 3 பனிக்குரங்குகள் (ஒன்று குட்டி), ஒரு ஜாவா மக்காக். இவை சிறிய குழுவாக இருக்கும், ஒன்றாக உறங்கும்.

ஒரு சிம்பன்ஸி, சொல்லப்போனால் இது குரங்கு அல்ல.

ஒரு கிப்பன்.

2 மார்மோசெட்டுகள்.

ஒரு கோல்டன் டமரின், ஒரு காட்டன் டாப் டாமரின்.

ஒரு நீள மூக்கு குரங்கு.

சிவப்பு மற்றும் கருப்பு கோலோபஸ்கள்.

ஸெப்.

9
ஸெப் ஒரு ‘ப்ராஜ்ஜா குவானான்’ வகையாக இருக்கும் என்று எய்மி நினைத்தாள். அது மிகவும் வயதாகிப் போய் கிட்டத்தட்ட முடியெல்லாம் இழந்து இருந்தது. அதைப் பற்றி அவளுக்கு கவலையாக இருப்பினும் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வந்தாள். பாத் டப்பில் கடைசியாக இறங்குவது இதுதான். மற்ற நேரங்களில் ஆரஞ்சும் சில்வருமான நிறம் பூசப்பட்ட நாற்காலியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும். வயதான நிகழ்ச்சித் தயாரிப்பாளரின் தோரணையில் பார்வையிட்டுக் கொண்டிருக்கும். சில நேரங்களில் எய்மி அதன் கையில் ஒரு கோலைக் கொடுத்து வைப்பாள். அணில்வால் குரங்குகள் அந்தக் கோலைத் தாண்டிக் குதிக்கும்.

10
குரங்குகள் எங்கே செல்கின்றன என்பதோ, எங்கே மறைகின்றன என்பதோ யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் அவை வெளிநாட்டு நாணயங்களுடனோ துரியன் பழத்துடனோ அல்லது கூரான மோராகான் செருப்புகளை அணிந்து கொண்டோ திரும்பி வந்தன. ஒவ்வொரு முறையும் அடிக்கடி ஏதாவது ஒன்று கர்ப்பம் தரித்துத் திரும்பி வந்தது. குரங்குகளின் எண்ணிக்கை நிலையற்று இருந்தது.

“எனக்குப் புரியவே இல்லை’’ கியோஃப் ஏதாவது யோசனை சொல்வான் என்ற எண்ணத்தில் அவனிடம் கேட்டாள் எய்மி. அவளால் எதையுமே அதற்கு மேல் தெரிந்து கொள்ள முடியவில்லை. எதிலும் தீர்மானம் இன்றி அவள் வாழ்க்கையை எதிர் கொண்டதில்லை, இந்த ஒரு விஷயம், சரி இந்த எல்லா விஷயமும்தான்.  குரங்குகள் குழுவாக இருப்பது, சீட்டாட்டங்கள் தெரிந்து வைத்திருப்பது, அவளுடைய வாழ்க்கையைத் திசை திருப்பியது, பாத் டப்பில் இருந்து மறைந்து போவது.. எல்லாமே. இதனோடே மல்லு கட்டிக் கொண்டிருந்தாள் சதா நேரமும். பெரிய மலை ஒன்றில் பிரேக் செயலிழந்த வாகனத்தில் கீழிறங்கும் உணர்வோடு அடிக்கடிபோராடும் அவள் இந்தத் தருணத்தில் மீண்டும் துவள ஆரம்பித்தாள்.

எய்மியைவிட கியோஃப்  இந்தப் பிரபஞ்சத்தை அதிகம் நம்புபவனாக இருந்தான். நம்பிக்கைதான் செயல்களுக்கும் அர்த்தம் தருவனவாகவும் எல்லா மக்களும் அன்பு செலுத்துபவர்கள்தான் என்றும் அவன் மனப்பூர்வமாக உணர்ந்ததால் அவனுக்கு ஆதாரங்கள் தேவைப்படவில்லை.  “நீ மற்றவர்களைக் கேட்டுப் பார்’’ என்று அடிக்கடி சொல்வான்.

11
எய்மியின் பாய் ஃப்ரண்ட்:

ஒரு பாய்ஃப்ரண்டிடம் எய்மி என்ன எதிர்பார்ப்பாளோ அத்தகையவனாக கியோஃப் இல்லை. ஒரு விஷயம் அவன் எய்மியைவிட இளையவன். அவனுக்கு 28, அவளுக்கு 43. இன்னொன்று அவன் அமைதியானவன். மூன்றாவது எடுப்பான தோற்றமும் தோள்வரை சரிந்து விழும் பட்டு போன்ற அடர்த்தியான தலைமுடி கொண்டவன். சவரம் செய்யப்பட்ட அவனுடைய தாடையின் விளிம்புகள் பளிச்சென தெரியும். அதிகம் சிரித்தாலும் அடிக்கடி சிரிக்காதவனாக இருந்தான்.

கலைப் படைப்பு கல்வியை முடித்திருந்த கியோஃப்பை அவள் ஒரு பைக் மெக்கானிக்காகத்தான் மோன்டானா கண்காட்சியில் சந்தித்தாள். நிகழ்ச்சி முடிந்ததும் எய்மமிக்கு வேலை எதுவும் இல்லாததால் அவன் பியர் சாப்பிட வருகிறாயா என்றதும் சம்மதித்தாள். அது அதிகாலை 4 மணி, அவர்கள் இருவரும் பஸ்ஸுக்குள் முத்தம் கொடுத்துக் கொண்டனர். குரங்குகள் தங்கள் படுக்கைக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், எய்மமியும் கியோஃப்பும் காதலிக்க ஆரம்பித்தனர்.

காலை உணவு முடிக்கும்போது குரங்குகள் ஒவ்வொன்றாக மேலே வந்து அவனுக்குக் கை கொடுத்தன, பிறகு அவற்றுடன் நன்கு பழகவும் ஆரம்பித்தான்.  அவள் அவனுடைய காமிரா துணிமணிகள், மற்றும் அவனுடைய சகோதரி கடந்த கிருஸ்துமஸ்ஸுக்கு அன்பளிப்பாகக் கொடுத்த ஓவியம் தீட்டப்பட்ட வண்ணப் பலகை ஆகியவற்றை பராமரிக்க உதவினாள். அவளுடைய இடத்தில் அந்த ஓவியப் பலகையை வைக்க இடம் ஏதும் இல்லாததால் பஸ்ஸின் மேற்கூரையாக பயன்பட்டது. சில சமயங்களில் அணில்வால் குரங்குகள் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும்.

எய்மியும் கியோஃப்பும் அவர்கள் காதல் குறித்து ஒருபோதும் பேசிக் கொண்டதில்லை.

கியோஃப் மூன்றாம் வகுப்பு டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தான். ஆனால் அது தண்டனை பெற்றதாக இருந்தது.

12
ஸெப் இறந்து கொண்டிருந்தது.

பொதுவாக பேசும்போது, குரங்குகள் குறிப்பிடும்படியான உடல் உறுதி பெற்றதாகக் கூறுவர். எய்மி அவ்வப்போது அவற்றின் சைனஸ் பிரச்சனைகளையும் வாய்வு கோளாறுகளையும் தொற்று நோய்களையும் சரி செய்து வந்தாள். மிகவும் மோசமான தருணங்களில் சில மருத்துவமனைகளையும் சிறப்பு மருத்துவர்களையும் நாடுவாள்.

ஆனால் ஸெப் இருமலால் அவதிப்பட்டது. முடி முற்றிலும் உதிர்ந்துவிட்டது. மெதுவாக நகர்ந்தது, நிகழ்ச்சிகளின் போது தடுமாறியது. செயிண்ட் பாலில் ஆறு மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி நடந்தபோது கோமோ உயிர்காட்சிசாலையின் மருத்துவர் வந்து குரங்குகளைப் பரிசோதித்தார். பொதுவாக குரங்குகள் நலமாக இருப்பதாகக் கூறி ஸெப்பை மட்டும் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றார்.

மருத்துவர் கினா, “இதற்கு என்ன வயதாகிறது?’’ என்று கேட்டார்.

“எனக்குத் தெரியாது’’ இந்த நிகழ்ச்சியை யாரிடமிருந்து வாங்கினாளோ அவருக்கும்கூட இது தெரிந்திருக்கவில்லை.

“இதற்கு மிகவும் வயதாகிவிட்டது.. அதாவது மிகவும் மோசமான அளவுக்கு’’ என்றார் கினா.

செனைல் டெமென்டியா, ஆர்த்ரிட்டிஸ், இதயக்கோளாறு. எப்போது நடக்கும் என்று கினா சொல்லவில்லை. “இது மகிழ்ச்சியான குரங்கு’’ என்றாள் அவள். “அது போகிறபோது போகட்டும்‘’

13
எய்மி இதைப் பற்றி நிறைய நினைத்தாள். ஸெப் இறந்து போனால் நிகழ்ச்சி என்னாகும்? எல்லா நிகழ்ச்சியின் போதும் ஒளி வெள்ளம் பாயும் நாற்காலியில் அது அமைதியாகஅமர்ந்து பார்த்துக் கொண்டிருக்குமே. இந்தக் குரங்கினால்தான் மற்ற குரங்குகள் கட்டுப்பட்டு நிகழ்ச்சியில் பங்கு பெறுவதாக அவள் நினைத்தாள். குரங்குகள் மறைவது பற்றியும் திரும்பி வருவது பற்றியும் அவளுக்கு மிகுந்த யோசனையாக இருந்தது.

ஏனென்றால் எல்லாவற்றுக்குமே ஒரு காரணம் இருந்தது. அப்படித்தானே? அப்படியொரு காரணம் இல்லாத பட்சத்தில் ஒருவர் எப்படி நோய்வாய் படமுடியும்? அல்லது உங்கள் கணவர் உங்களிடம் அன்பு செலுத்தாமல் போய்விட முடியும்? நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரணமடைய முடியும்? காரணமே இல்லாமல் இதெல்லாம் எப்படி நடக்கும்? எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஸெப்பின் மரணத்துக்குப் பின்னும் ஒரு காரணம் இருக்கும்.

14
எய்மி இந்த வாழ்க்கையை எதற்காக நேசிக்கிறாள்:

அதற்கு ஒரு அர்த்தமும் இருக்கவில்லை. அவள் கண்ட இடத்தில் வாழ முடியாது. அவளுடைய உலகம் 38 அடி அகலமும் 127 காட்சிகளினால் ஆன நீளமும் இப்போது 26 குரங்குகளால்  ஆன ஆழமும் கொண்டது. இதுதான் முடிந்தது.

அவள் நடத்தும் காட்சிகளுக்கு ஒரு அர்த்தமும் இல்லை. அவை வேறு இடங்களுக்குச் செல்லும்போது அவளுடைய சிறிய உலகம் சற்றே விரிவடையும். அதே காட்சிகள்தான், இடம் மட்டுமதான் மாறிக் கொண்டிருக்கும். சமயங்களில் அவள் செல்லும் புதிய ஊர்களின் வித்தியாசமான இரவு நேர சீதோஷ்ண நிலை, மேடு பள்ளமான நிலம், மலைகள், சமவெளிகள், வான விளிம்பு… இவற்றில்தான் வித்தியாசத்தை உணர்கிறாள். மற்றபடி எப்போதும் போல்தான்.

கண்காட்சியின் உலகம் இவ்வளவுதான்: விழா, விலங்குகளை அடைத்துவைக்கும் கூடாரம், கலைநிகழ்ச்சி, கார் ரேஸ், கருகிய சர்க்கரையின் மணம், கேக்கின் மணம், விலங்குகளின் படுக்கை.

இதில் கியோஃப் மட்டும் ஒரு வித்தியாசம்: தாற்காலிகமான, அர்த்தமற்ற, காதலற்ற உறவு.

15
இவை எய்மியின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களாவன:

அவள் கால் எலும்பு சில ஆண்டுகளுக்கு முன் முறிந்து கொண்டது. அதனால் எலும்பில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக பத்து மாதங்களுக்கு மேலாக வதைபட்டாள். அதன் பிறகும் அவளுக்கு வலி இருந்தது.

அவளுடைய கணவன் அவனுடைய அலுவல் உதவியாளரிடம் காதல் வயப்பட்டு விலகிச் சென்றுவிட்டான்.

அவளுடைய சகோதரிக்கு கேன்ஸர் என்று தெரிந்த அதே வாரத்தில் அவளுடைய வேலையில் இருந்து நீக்கப்பட்டாள்.

பல்வேறு கேள்விக்குரிய வாய்ப்புகளுக்குப் பிறகு அவள் தனிமையாக்கப்பட்டு வரைபடத்தில் இல்லாத இடத்தில் அமைந்த அடுக்குமாடி குடியிருப்பில் பைத்தியக்காரியைப் போல இருக்கிறாள்.

எதுவுமே நிரந்தரமில்லை. எதையும் நீங்கள் இழக்கக் கூடும். அப்படியே நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருந்தாலும் இறப்பதன் மூலம் எல்லாவற்றையும் இழக்கத்தான் செய்கிறீர்கள். சில பொருளையோ, சில மனிதர்களையோ இழக்கும்போது எய்மியின் கவலை தோய்ந்த அடிபட்ட மனம் அவளை விஷமூட்டி பயமுறுத்தி இருட்டில் அடைத்துவிடும்.

16
எய்மி நிறையப் படித்தாள், இந்த முரண்பாடுகள் பற்றி அவள் நிறையவே தெரிந்து வைத்திருந்தாள்.

கூண்டுகளில் எதற்கும் பூட்டுகள் இல்லை. குரங்குகள் அதைப் படுக்கை அறையாகப் பயன்படுத்தி வந்தன. ஏதாவது தனிப்பட்ட வசதி தேவைப்படும்போது அவை அங்கிருந்து வெளியேறிக் கொண்டன. அதாவது பெரும்பாலும் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், சுற்றி புல்வெளியாக இருப்பின் அவை அப்படி நடந்து  கொண்டன.

தற்போது மூன்று குரங்குகள் படுக்கை மீது அமர்ந்து வண்ணப் பந்துகளைப் பொருத்தி விளையாடும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தன. சில கம்பள நூல் உருண்டைகளோடு விளையாடிக் கொண்டிருந்தன, திருப்புளியை வைத்து தரையைக் குத்திக் கொண்டிருந்தன. சில எய்மி மீதும் கியோஃப் மீதும் பழுதான சோபாமீது  ஏறி விளையாடிக் கொண்டிருந்தன. சில திருட்டுத்தனமான கேபிள் லைனில் வந்த குழந்தைகள் விளையாட்டை கம்ப்யூட்டரில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன.

கருப்பு கோலோபஸ் குரங்கு மரச் சட்டங்களை வைத்து சமையல் டேபிளின் மீது விளையாடிக் கொண்டிருந்தது. அதை வைத்துக் கடந்த வாரத்தில் வளைவை உருவாக்கியிருந்தது, அதை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுக் கொண்டிருந்தது. எய்மி அதற்கு சில முறை கற்பிக்க முயற்சித்தும்கூட அதற்கு அது கூடி வரவில்லை. பொறுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது.

பேங்கோவுக்கு நாவல் ஒன்றைப் படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான் கியோஃப். அதுவும் அதைத் கூடவே வாசிக்கிற தொனியிலேயே அந்தப் பக்கத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. சில சமயங்களில் ஒரு வார்த்தையை தன் பிரகாசிக்கும் விழிகளோடு அது சுட்டிக் காட்டும். கியோஃப் மீண்டும் அந்த வார்த்தையைச் சிரித்துக் கொண்டே படித்துக் காட்டிவிட்டு நாவலைத் தொடருவான்.

ஸெப் அதன் கூண்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது: தன் போர்வையையும் பொம்மையையும் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கும். சமீப காலமாக அது அப்படித்தான் செய்கிறது.

17
ஸெப்பை இழந்தபின் எய்மிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மற்ற குரங்குகளுக்கு என்ன ஆகும்? 26 குரங்குகள் என்பது பெரிய எண்ணிக்கை, ஆனால் அவை ஒன்றை ஒன்று நேசித்தன. மிருகக் காட்சிச்சாலை அல்லது சர்க்கஸ் நடத்துபவர் யாராவது கிடைத்தால்தான் இவற்றை பராமரிக்க முடியும். தனிப்பட்ட யாரும் சரிபட்டு வராது.  அதுவுமில்லாமல் இவற்றை அவை விரும்புகிற இடத்தில் உறங்குவதற்கு அனுமதிப்பார்களா என்றும் விடியோவில் குழந்தைகள் சானலைப் பார்ப்பதற்கு விடுவார்களா என்றும் அவளுக்கு யோசனையாக இருந்தது. ஸெப் இல்லாமல் போனால் இவை எங்கே போகும்.. பாத் டப்புக்குள் சென்ற பின்பு அந்தப் புதிரான பயணம் எப்படி நடக்கும்? அவளுக்கு இன்னமும் அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை, இது எல்லாமே ஸெப் இருப்பதால்தான் நடைபெறுகிறதா?

அப்புறம் எய்மி? இந்த செயற்கையான உலகில் அவளுடைய பாதுகாப்பு: அந்த பஸ், அவளை அடையாளம் கண்டு கொண்ட காட்சிகள், அர்த்தம் புரிபடாத அந்த பாய்ஃப்ரண்ட். இந்தக் குரங்குகள்… அப்புறம் என்ன?

18
இந்தக் காட்சியை எடுத்து நடத்த ஆரம்பித்த சில  மாதங்களில் அவளுக்கு வாழ்வோ, சாவோ ஒரு பொருட்டாக இல்லை. அப்போது நடந்த சம்பவம் இது. நிகழ்ச்சியின் கடைசி அம்சம். குரங்குகள் ஏணியில் ஏறிக் கொண்டிருந்தன. ஸெப் ஏணியில் ஏறி பாத் டப்பில் குதித்தது, நுரையீரலில் காற்றை நிரப்பி சப்தம் எழுப்பியது.  இவள் ஓடிச் சென்று பாத் டப்புக்குள் பார்த்தாள். குரங்குகள் கசப்பான ஒரு சிரிப்பை உதிர்ந்தன. இவள் என்ன செய்யப் போகிறாள் என்று அவற்றால் யூகிக்க முடிந்தது. இவளும் அந்த பாத் டப்புக்குள் இறங்கி பாத் டப்பின் வளைந்த பகுதியைப் பிடித்து இறுகப் பிடித்துக் கொண்டாள்.

சட்டென அது நடந்தது.  செயின் ஒளி வெள்ளத்தினிடையே பாத் டப் கீழே கவிழ்ந்தது.

அவள் பத்தடி உயரத்தில் இருந்து பொத் என்று கீழே விழுந்தாள். அவளுடைய கால் எலும்பு முறிந்தது. மேடையில் அவள் விழுந்தாலும் சட்டென சுதாரித்து எழுந்தாள்.

குரங்குகள் மட்டும் காணாமல் போயிருந்தன.

அரங்கில் மயான அமைதி. அது அவள் சொதப்பிய நிகழ்ச்சிகளில் ஒன்று.

19
எய்மியும் கியோஃப்பும் சாலினா கண்காட்சியினூடே நடந்து கொண்டிருந்தனர். அவளுக்குப் பசியெடுத்தது, சமைக்க விருப்பமில்லாததால் நாலரை டாலரில் ஹாட்டாக்ஸும் மூன்றேகால் டாலரில் கோக்கும் விற்கும் கடையைத் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது எய்மமியை நோக்கி கியோஃப் கேட்டான்: “இதென்ன கொடுமை? நாம் ஏன் நகரத்துக்குச் சென்று வசிக்கக் கூடாது? நிஜமான உணவு உண்டு சராசரி மனிதர்கள் போய் வாழலாமே?’’

‘ஐரினா வில்லா’ என்ற உணவகத்துக்குச் சென்று ‘பாஸ்தா’வும் ‘ஒயினு’ம் உட்கொண்டார்கள். “நீ ஏன் எப்போதுமே, ‘அவர்கள் எங்கே போகிறார்கள்?’ என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறாய்? ‘’ என்றான் கியோஃப். பாட்டிலில் பாதி அவனுள்ளே போயிருந்தது. நீலமா, சாம்பலா என்று தீர்மானிக்க முடியாத வண்ணத்தில் அவன் கண்கள் மாறியிருந்தாலும் விளக்கு வெளிச்சத்தில் கறுப்பாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் தெரிந்தன.

“இதோ பார் என்ன நடக்கிறது என்பதை நம்மால் ஒரு போதும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அதுவல்ல கேள்வி. எனது கேள்வியெல்லாம் அவை ஏன் ஒழுங்காகத் திரும்பி வருகின்றன என்பதுதான்’’

எய்மி வெளிநாட்டு நாணயங்களையும் மரச் சட்டகம் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தாள். சட்டென நினைவுக்குத் திரும்பியவளாக “எனக்கும் தெரியாது… எதற்காகத் திரும்ப வரவேண்டும்?’’ என்றாள்.

அன்று பின் இரவு பஸ்ஸுக்குத் திரும்பியதும் கியோஃப், “எங்கேயாவது போகட்டும். என் தத்துவம் இதுதான். எங்காவது போகட்டும். ஆனால் இதுதான் அவர்கள் வீடு.  எங்கு சென்று சுற்றிப் பார்த்தாலும் தாமதமாகவோ, சீக்கிரமாகவோ வீடு வந்து சேருவதைத்தான் விரும்புகிறார்கள்’’ என்றான்.

“ஆனால் அவர்களுக்கெல்லாம் வீடு என்று ஒன்று இருக்கிறது.’’ என்றாள் எய்மி.

“எல்லோருக்கும் வீடு என்று ஒன்று இருக்கிறது. அதில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ’’ என்றான் கியோஃப்.

20
அன்று இரவு, கியோஃப் ஒரு மக்காக்கைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். எய்மி ஸெப்பின் கூண்டுக்குள் போய் “நீ போவதற்குள் பாத்டப்புக்குள் எப்படி மறைந்து போகிறாய் என்பதைக் காட்டுவாயா?’’ என்றாள்.

ஸெப் தன் நீல நிற போர்வைக்குள் இருந்து நிச்சயமற்ற பார்வை பார்த்தது, காட்சி நடந்துவரும் அரங்கு நோக்கி நடந்தது.

ஏராளமான ட்ரெய்லர்களும் பஸ்ஸும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சிலரது குரல் மட்டும் திரைச்சீலைகளுக்குப் பின்னே மெல்ல கேட்டுக் கொண்டிருந்தது.  வானம் கருநீல வண்ணத்தோடு நட்சத்திரங்களின் மினுக்கலோடு இருந்தது. நிலவு அவர்களை நோக்கி நேரடியாக ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஸெப்பின் முகத்தில் நிழல் படிந்திருந்தது.

பாத் டப் அரங்கத்துக்குப் பின்னே இருந்தது. அடுத்து காட்சி நடப்பதற்கு தயார் நிலையில் இருந்தது. இருண்டு இருந்த அரங்கில் ‘வெளியே’ என்ற பலகை மட்டும் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு மங்கிய சோடியம் வேப்பர் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.  பாத் டப்பின் மேலே ஏறி வளைந்த அதன் விளிம்புகளில் அவளுடைய கையைத் தடவி அழைத்துச் சென்றது. உள்ளே இருந்த மங்கிய பகுதியை அவளுக்குக் காட்டியது.

கயிறைப் பிடித்து இழுத்து டப்பை மேலே இழுத்தது. அதனுடைய பிரத்யேக ஓசையை எழுப்பிக் கத்தியது. பாத் டப் கீழ்புறமாகக் கவிழ்த்துக் காட்டியது, அது காலியாக இருந்தது.

அது இல்லாமல் போனதை அவள் பார்த்தாள். அது இருந்தது, மறைந்தது. வேறு எதுவும் இல்லை. கதவு இல்லை. இல்லை, எந்த ஒளிர்வும் இல்லை, சிறிய வெடிச்சத்தம் இல்லை, காற்று பலமாக வீசவில்லை. அதில் ஒரு அர்த்தமும் தோன்றவில்லை. அதற்கான பதில் ஸெப்புக்கு மட்டுமே தெரிந்ததாக இருந்தது.

அவள் பஸ்க்க்குள் நுழைந்தபோது ஸெப் ஏற்கெனவே தன் போர்வைக்குள் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்ததது.

21
பிறகு ஒரு நாள்.

எல்லோரும் அரங்கத்தின் பின் புறம் இருந்தனர். எய்மி தன் மேக்கப்பை முடித்துக் கொண்டிருந்தாள். கியோஃப் எல்லாவற்றையும் இரண்டாவது முறையாக பரிசோதித்துக் கொண்டிருந்தான். ஒப்பனை அறையில் குரங்குகள் வட்டவடிவில் ஆடை அணிந்து அமர்ந்திருந்தன. ஸெ நடுவில் அமர்ந்திருந்தது. பக்கத்தில் பேங்கோ தன் சிறிய பச்சை நிற உடுப்பில் அமர்ந்திருந்தது. எல்லாக் குரங்குகளும் வரிசையாக வந்து ஸெப்பிடம் கைகுலுக்கின. மலர் கண்காட்சியின் நடுவில் அமர்ந்திருக்கும் இளவரசி போல அது எய்மிக்குத் தோன்றியது.

அன்று இரவு, காட்சியில் ஸெப் ஏணியில் ஏறவே இல்லை. நாற்காலியிலேயே அமர்ந்துவிட்டது. பேங்கோ கடைசி குரங்காக மேலே ஏறியது. குரலெழுப்பியது. எய்மிக்கு ஸெப் இல்லாமல் நிகழ்ச்சி நடக்குமா என சந்தேகமாகத்தான் இருந்தது. கியோஃப் தைரியமாக இருந்தான். பேங்கோ கத்தி முடித்ததும் கியோஃப் பாத்டப்பின் மீது ஒளிவெள்ளத்தைத் திருப்பினான். பாத் டப் காலியாக இருந்தது.

ஸெப் நாற்காலியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளனைப் போல அமர்ந்து காட்சி தந்தது. அரங்கச் சீலை கீழே இறக்கப்பட்டதும் எய்மமி அதைக் கட்டி அணைத்துக் கொண்டாள். கியோஃபின் கைகள் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டிருந்தது.

ஸெப் இவர்கள் இருவருக்கும் இடையில் மெத்தையில் படுத்து உறங்கியது. காலையில் எழுந்தபோது ஸெப் தன் கூண்டுக்குள் தனக்குப் பிடித்தமான பொம்மையை அணைத்தபடி படுத்திருந்தது. அதன் பிறகு அது எழுந்திருக்கவில்லை. சுற்றிலும் குரங்குகள் சூழ்ந்திருந்தன.

அன்று முழுதும் எய்மி அழுது கொண்டே இருந்தாள்.

கியோஃப் அவளைத் தேற்றினான். “நிகழ்ச்சி நடந்தது ஸெப்பினால் இல்லை’’ என்றாள்.

“எனக்குத் தெரியும்‘’ என்றான் அவன்.

22
பாத் டப் சாகஸம் என்று எதுவும் இல்லை. குரங்குகள் ஏணியில் ஏறி பாத் டப்புக்குள் குதிக்கின்றன, காணாமல் போகின்றன. உலகமே இப்படியான பிரமிப்பானவற்றால் நிகழ்ந்ததுதான். இதற்கு ஒரு பொருளும் இல்லை. அதில் இதுவும் ஒன்று. ஒருவேளை குரங்குகளுக்கு இது தெரிந்திருக்கும், பகிர்ந்து கொள்ள அவற்றுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். அவற்றை அதற்காகக் கடிந்து கொள்ளவா முடியும்?

ஒருவேளை இது குரங்குகளின் புதிராக இருக்கலாம். மற்ற குரங்குகளிடம் பகிர்ந்து கொள்ள கூடியதாக இருக்கலாம்.  எய்மியும் கியோஃப்பும் அவற்றுக்கு வந்து போகும் விருந்தாளிகளாகத் தோன்றலாம். நிகழ்ச்சியின் போது மட்டும் தேவைப்படும் நபர்களாக இருந்திருக்கக் கூடும்.

23
ஆறு வாரங்களுக்குப் பிறகு, ஒருவன் எய்மியை நோக்கி வந்தான், நிகழ்ச்சி முடிந்து எய்மியும் கியோஃப்பும் முத்தமிட்டு முடிந்த நேரத்தில்.

குள்ளமாகவும் வெளிறிய தோற்றத்தோடும் வழுக்கையாகவும் இருந்தான். உள்ளே இருந்து உறிஞ்சப்பட்டு விட்ட மனிதனைப் போல இருந்தான். அவளுக்கு அவனுடைய பார்வையைத் தெரிந்தது.

“நான் இந்த நிகழ்ச்சியை வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்’’ என்றான்.

எய்மி சொன்னாள்:  “நீங்கள் வாங்கிக் கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும்‘’

அவள் அவற்றை ஒரு டாலருக்கு விற்றாள்.

24
மூன்று மாதங்களுக்குப் பிறகு, எய்மியும் கியோஃப்பும் பெல்லிங்காம் அடுக்கு மாடிக் குடியிருப்பில் முதல் முறையாக வீடெடுத்துத் தங்கினர்.  சமையலறையில் ப்ரிட்ஜ் திறந்து மூடப்படும் சப்தம் கேட்டது, பேங்கோ அதிலிருந்து ஆரஞ்சுப் பழச்சாறை எடுத்து டம்ளரில் நிரப்பிக் கொண்டிருந்தது.

அதை அவர்கள் ஒரு சீட்டுக் கட்டு கேமைக் கொடுத்து அதனுடைய இருப்பிடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

***

கிஜ் ஜான்ஸன் : விஞ்ஞானப் புனைகதைகளுக்காக வழங்கப்படும் உயர்விருதான  நெபுலா விருதினை 2009 ஆம் ஆண்டு தனது Spar என்னும் சிறுகதைக்காகப்  பெற்ற இவர்,  ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக நெபுலா மற்றும் ஹ்யூகோ விருதுகளுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுக் கொண்டே இருப்பவர். தனது நாவல் மற்றும் சிறுகதைகளுக்காக விஞ்ஞானப் புனைகதை விருதுகள், ஃபேன்டஸி விருதுகள் எனப் பல பெற்றிருப்பவர். 2008 ஆம் வருடம் World Fantasy Award விருது பெற்ற ‘26 குரங்குகள் அதனுடன் ஒரு படுகுழி’ என்ற இந்தக் கதை, ‘வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் ஏற்படும் இடையறாத கேள்வியை மனித மனம் எப்படி தர்க்கரீதியாக கேட்டுக் கொண்டே இருக்கிறது, என்பதுதான் இந்தக் கதைக்கான மையம். அந்தக் கேள்வி ஒரு சாராரிடமிருந்து இன்னொருத்தரின் தலைக்கு எப்படி இறக்கி வைக்கப்படுகிறது என்பதும் வாழ்க்கையில் அதீதமானது என எதுவுமே இல்லை என்பதுமான தத்துவச் சிந்தனையை நினைவுபடுத்துகிறது’… என்று விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள்.