I . லத்தீன் அமெரிக்கப் பூர்வகுடிக் கவிதைகள் அறிமுகம்
லத்தீன் அமெரிக்க நாடுகளின் இலக்கியம் கடந்த 20 ஆண்டுகளிலிருந்து இன்று வரை சர்வதேச இலக்கியப் போக்குகளை நிர்மாணிக்கும் மகத்தான சக்தியாக விளங்குகிறது என்பதை நவீன தமிழின் சீரிய வாசகர்கள் உணர்வார்கள். இந்த தனித்துவமான மரபு கொண்ட ஸ்பானிஷ் மொழியின் வேர்கள், இந்த நாடுகளின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகளான பூர்வகுடி மக்களின் ஆற்றல் மிகுந்த கலை இலக்கியக் கூறுகளிலிருந்து செழுமை பெற்று லத்தீன் அமெரிக்க இலக்கியமாக மலர்ச்சி அடைந்திருப்பதை இந்த பூர்வகுடி மக்களின் கலைகள் மூலமாக அறியலாம். லத்தீன் அமெரிக்க நவீன இலக்கிய மரபின் வளர்ச்சி என்பது, பூர்வ குடி மரபான மெசோஅமெரிக்க கலாச்சார மரபுகளிலிருந்து பொங்கிப் பிரவாகமெடுத்தது என்பதை அலேஜோ கார்பெண்டியரிலிருந்து, போர்ஹேஸ், ருல்ஃபோ, ஃபுயண்டஸ், பாஸ், கோர்த்தஸார், மார்க்வெஸ்.. என்று பல புகழ்பெற்ற எழுத்தாளர்களின் பிரதியில் பயணம் போகும்போது உணரலாம்.
மெசோஅமெரிக்கா ஒரு புவியியல் பகுதி அல்லது ஒரு சமூக-அரசியல் பிரிவு அல்ல, மாறாக, கலாச்சார பண்புகளை பகிர்ந்து கொள்ளும் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று வரையறுக்கப்படுகிறது. மெசோஅமெரிக்க மரபு என்பது மெக்ஸிகோ, குவாத்தமாலா, ஹோண்டுராஸ், பெலிஸ், எல் சால்வடோர், நிகரகுவா மற்றும் கோஸ்டாரிகா என பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய புவியியல் பகுதிகளில் ஒத்த கலாச்சார பண்புகளை பகிர்ந்து கொண்ட பல்வேறு வாழ்வியல் மரபுகளைக் குறிக்கிறது.
தனித்துவமான மெசோஅமெரிக்க கலாச்சார பாரம்பரியம் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் வெற்றியுடன் முடிந்தது. அடுத்த நூற்றாண்டுகளில், மெசோஅமெரிக்க பூர்வீக கலாச்சாரங்கள் படிப்படியாக ஸ்பானிஷ் காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டன. மெசோஅமெரிக்காவில் வசிக்கும் பழங்குடி மக்களிடையே மெசோஅமெரிக்க கலாச்சார பாரம்பரியத்தின் அம்சங்கள் இன்றும் வாழ்கின்றன, அவர்களில் பலர் தங்கள் மூதாதையர் மொழிகளைத் தொடர்ந்து பேசுகிறார்கள், மேலும் பல நடைமுறைகளை தங்கள் மெசோஅமெரிக்க வேர்களுக்குத் தக்கவைத்துக்கொள்கிறார்கள்.
பூர்வகுடி மக்கள் என்றதும் பொதுப் புத்திக் கண்ணோட்டம் உருவாக்கி வைத்திருக்கும் “பழங்குடித் தன்மை” களோடு அவர்களை கற்பனை செய்யவேண்டாம். தொன்று தொட்டு வரும் இந்த பழங்குடி இன மரபில் பிறந்தவர்கள். அந்த மரபின் கூறுகளை தொடர்ந்து அடையாளப்படுத்தி வருபவர்கள். அனைவரும் மிகவும் தற்கால வளர்ச்சியடைந்த வாழ்வியல் போக்குகளோடு இயங்கிக் கொண்டிருப்பவர்கள். திரைப்படத்துறை சார்ந்த பிரபலங்களாகவும், கலை, அரசியல், தொழில்துறை என்று பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கிறார்கள்.
மெசோஅமெரிக்க மக்களை ஒன்றிணைக்கும் எந்த ஒரு மொழியும் இல்லை. இவர்கள் 125 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். இவர்கள் தங்களது நிலப்பகுதிகளை “அபியா யலா” என்றே அழைக்கின்றனர். “முன்னோர்களின் இரத்தத்தின் நிலம்” என்று பொருள்படும் அபியா யலா, பூர்வீக மக்களால் பயன்படுத்தப்படும் பெயர், பொலிவிய அய்மாரா இனக்குழு மக்களின் தலைவர் தகீர் மமனி, “அபியா யலா” என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு வாதிடுகிறார், “நமது கிராமங்கள், நமது நகரங்கள் மற்றும் நமது கண்டங்களில் வெளிநாட்டுப் பெயர்களை வைப்பது நமது அடையாளத்தை இழப்பதற்குச் சமம்” என்கிறார். புதிய உலகம் அல்லது அமெரிக்கா போன்ற ஒரு சொல்லைக் காட்டிலும் “அபியா யலா” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது பூர்வகுடி உரிமைகளுக்கான ஆதரவைக் குறிக்கும் கருத்தியல் தாக்கங்களைக் கொண்டிருக்கிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த மக்களின் கவிதைகளை இங்கு பண்டைய சிறப்பு மிக்க செம்மொழித் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். இது இனவியல் ஆவணம் கொண்ட கவிதைகள் அல்ல, இருப்பினும் முழு பார்வையில் மறைந்திருக்கும் கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்கு இதைவிட சிறந்த வழி இல்லை; அது இலக்கியம்.
மாயன், ஆஸ்டெக், ஓட்டோமாங்குயன், சோக்வியன்.. போன்ற தொல்மரபின் பழங்குடி கவிதைகள் பண்டைய காலத்தை எவ்வாறு சமகால உருவங்களுடன் நெசவு செய்கின்றன என்பதை உணரும்போது ஒரு பெரும் பிரமிப்பு மனமெங்கும் சூழ்ந்து விடுகிறது. இந்த கவிஞர்கள் பரந்த உலகின் அங்கீகாரத்திற்குத் தகுதியானவர்கள் என்பதை உரத்துச் சொல்லலாம்.
*******
II நான்கு மெசோஅமெரிக்க கவிஞர்களை முன்வைத்து அபியா யலாவில் kuxlejal – ஐ மொழிபெயர்ப்பது சம்பந்தமாக..
இங்கு பால் எம். வோர்லியின் ஒரு சிறு கட்டுரையை மொழியாக்கம் செய்து தந்திருக்கிறேன். மொழிக்குடும்பங்களில் ஒரு சொல் எவ்வாறெல்லாம் உருமாறுகிறது என்பதை மிக வும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார், இந்தக் கட்டுரையில்.
பால் எம். வோர்லி (Paul M. Worley) மேற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் உலகளாவிய இலக்கியத்தின் இணைப் பேராசிரியராக உள்ளார். “Telling and Being Told: Storytelling and Cultural Control in Contemporary Yucatec Maya Literatures” என்ற இவருடைய நூல் மாயா இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் முக்கியமான நூல், மற்றும் ரீட்டா எம். பலாசியோஸுடன் இணைந்துஎழுதியுள்ள “Unwriting Maya Literature: Ts’íib as Recorded Knowledge” என்ற நூலின் இணை ஆசிரியர். மற்றும் லத்தீன் அமெரிக்க ஆய்வுகள் குறித்த தென்கிழக்கு கவுன்சிலின் Sturgis Leavitt (2018) விருதை வென்றவர். பழங்குடி எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை அவர் மொழிபெயர்த்துள்ளார். மற்றும் பூர்வகுடி இலக்கியத்தின் ஆவணக் கண்காணிப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
நான்கு மெசோஅமெரிக்க கவிஞர்களை முன்வைத்து அபியா யலாவில் kuxlejal – ஐ மொழிபெயர்ப்பது சம்பந்தமாக..
– பால் எம். வோர்லி
பூர்வகுடி மரபு சார்ந்த இலக்கியங்களை ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பது அரிதாகவே செய்யப்படுகிறது, உதாரணமாக, “இருமொழி” பூர்வகுடி நூல்களைப் பொறுத்தவரை, அந்த எழுத்தாளர்களே தங்களது மற்றும் ஸ்பானிஷ் மொழி எழுத்து இரண்டையும் உருவாக்க முனைகிறார்கள். யுகாடெக் மாயா கவிஞர் வால்டெமர் நோ ட்செக் (2017) – ன் கவிதை பற்றிய எனது சமீபத்திய கட்டுரையில் நான் கூறுகையில், இந்த இருமொழி படைப்புகளில் ஒருவர் காணும் மாறுபட்ட எழுத்துக்கள் ஸ்பானிஷ் மொழியில் அதன் உரையை படித்தால், பூர்வகுடி மொழி, அல்லது இந்த இரண்டு மொழிகளிலும் பல்வேறு மாறுபட்ட வாசிப்புகளுக்கு இட்டுச் செல்லும். என் பார்வையில், குவாதமாலா இலக்கிய விமர்சகர், ஆர்ட்டுரோ அரியாஸ் (2017, 35) இந்த இலக்கிய உற்பத்தியை இரண்டு சுயாதீனமான இருப்புக்களைக் கொண்ட ஒரு வகையான “டிரான்ஸ்கிரேஷன்” என்று நாம் நினைக்கலாம் என்று வாதிடும்போது, மிகவும் சரியானது. உண்மையில், மெக்ஸிகோவில் உள்ள பழங்குடி எழுத்தாளர்களிடையே ஒரு பொதுவான புகார் என்னவென்றால், இருமொழி வெளியீடு என்பது வழக்கமாக உள்ளது, அதாவது, அவர்களின் ஒருமொழியில் எழுதும் மெஸ்டிசோ சகாக்களுடன் ஒப்பிடும்போது, அவர்கள் தங்கள் மூதாதையர் மொழியில் ஒரு எழுத்தாளராகவும்,ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்க வேண்டும் என்ற இரட்டை வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் அல்லது வேறு எந்த மூன்றாம் மொழியிலும், இலக்கு மொழியின் மூலம் இந்த டிரான்ஸ்-கிரியேட்டிவ் செயல்முறைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதில் சிக்கல் ஒன்றாகும். ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் முழுவதும் இந்த எழுத்தோட்டத்தை ஒருவர் வெற்றிகரமாக வழங்கினாலும், இந்த மொழியியல் உறவுக்குள் பூர்வீக மொழி எங்கே பொருந்துகிறது? இந்த நூல்களைப் பார்க்க வாசகரை வெற்றிகரமாக வழிநடத்த முடியுமா அல்லது அவை ஆசிரியரின் இன-மொழியியல் அடையாளத்தைக் குறிக்கும் பொருள்களைத் தவிர வேறொன்றுமில்லை என்று கண்டிக்கப்படுகிறதா?
இந்தக் கேள்விகளுக்கு இங்கே பதிலளிக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, இந்த நூல்களின் குழுவில் மொழிபெயர்ப்பின் தருணங்களைப் புரிந்துகொள்ள அவர்கள் ஒரு பின்னணியாக பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன். குறிப்பாக, அவற்றில் ஒரு வகையான மாற்று மொழிபெயர்ப்பை நான் வலியுறுத்த விரும்புகிறேன், இந்த ஆசிரியர்கள் அந்தந்த இலக்கிய உற்பத்தியில் பயன்படுத்திக் கொள்ளும் செயல்முறைகள் மற்றும் அதில் அவர்கள் பழங்குடியினர் அல்லாத உலகத்தை தங்கள் சொற்களில் மொழிபெயர்க்கிறார்கள். அவ்வாறு செய்யும்போது, அவை இந்த உலகங்களுக்கிடையில் அதிகாரத்தின் இயக்கவியலைத் திருப்பி, மேற்கு மற்றும் நவீனத்துவம் மற்றும் நாகரிகத்தின் திட்டங்கள் என்று அழைக்கப்படுவதை கேள்விக்குள்ளாக்குகின்றன. இந்த அணுகுமுறைக்கான எனது உத்வேகம் கொலம்பிய எழுத்தாளர் மிகுவல் ரோச்சா விவாஸ் எழுதியுள்ள விமர்சன நூல் மற்றும் அவரது “பூர்விக தரிசனங்கள்” (visiones de cabeza) என்ற கருத்துக்களிலிருந்தும் வருகிறது, மேலும், இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்ட கவிதையிலிருந்தும் வருகிறது. கச்சிகல் (Kaqchikel) மொழிப் பதிப்பை வாசகர் எப்படி எடுத்துக் கொள்கிறார்? வாசகர் இதை புரிந்துகொள்ள முடியாத கடிதங்களின் தொடராகப் பார்க்கிறாரா, அல்லது அதை வேறு வழியில் படிக்க முயற்சித்தாரா? நெக்மா கோயின் மொழிபெயர்ப்பு வெறுமனே மொழியியல் அல்ல என்பதையும், காலனித்துவ நிலம் சார்ந்த கருத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன, பெயரிடப்படுகின்றன, நியமிக்கப்படுகின்றன, தீர்மானிக்கப்படுகின்றன என்பதை உள்ளடக்கியது என்பதை வாசகர்கள் அவதானிக்கிறார்களா?
இந்த கவிதைகளை ஒன்றிணைக்கும் விஷயங்களில், அவை அனைத்தும் மெசோஅமெரிக்காவில் தோன்றியவை என்பதைத் தவிர, பூர்வ குடி உலகங்கள் எவ்வாறு மேற்கு நாடுகளுக்கு தங்களை விளக்குகின்றன, சவால் விடுகின்றன, மொழிபெயர்க்கின்றன என்பதைக் காண்பிக்கும் வழியாகும். இந்த உலகங்கள் நிலையான மற்றும் மீளமுடியாத தொடர்பு, உரையாடல் மற்றும் போராட்டத்தின் செயல்முறைகளில் உள்ளன, பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த மொழிகளின் கண்ணோட்டங்கள் மற்றும் வகைகளிலிருந்து, பழங்குடியினர் அல்லாதவர்கள் மொழிபெயர்க்கிறார்கள். மிக்சே எழுத்தாளர் யஸ்னயா எலெனா அகுய்லர் கில் (2017, 35) “அதுவும் நல்லது” என்று வரவேற்கிறார். உதாரணமாக, இங்குள்ள சியாபனேகன் மாயா கவிஞர்களின் பூர்வீக மொழி கவிதைகளில் “kuxlejal” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில், ஜோட்ஸில் எழுத்தாளர் ரூபர்டா வாஸ்குவேஸ் பாடிஸ்டா மற்றும் செல்டல் எழுத்தாளர் அட்ரியானா லோபஸ். பாடிஸ்டா வாஸ்குவேஸின் கவிதைகளில் kuxlejal மூன்று முறை தோன்றும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட கருத்து ஒருமொழி வாசகருக்கு சற்று வித்தியாசமானதாகப் போய்ச் சேரும். கக்ஸ்லெஜல் என்பது “வம்சாவளியினர்” “படபடப்பு” “எம்பிராய்டரி இயந்திரங்கள்” “குப்பை பெண்” “வரலாறு” ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்தச் சொல் லோபஸின் கவிதைகளில் நான்கு முறை, கடல் நத்தையின் சாயத்தில் ‘வாழ்க்கை ’, ‘ வரலாறுகள் ’ மற்றும், சுழல் கனவுகளில் ’இருத்தல்’, பாரம்பரிய ஆடைகளில் ‘வாழ்க்கை ’எனத் தோன்றுகிறது. இந்த கவிதைகளில் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்க்கையின் பல அம்சங்களுடன் தொடர்புடைய ஒரு வார்த்தையான kuxlejal – ல் இருந்து நாம் யோசிக்கும்போது, இருத்தல் மற்றும் இருப்பைப் பற்றிய நமது உணர்வுக்கு என்ன நடக்கும்? பழங்குடியினரல்லாத மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்க்கும்போது, kuxlejal என்பது யார் அல்லது என்ன?. தற்செயலாக இங்குள்ள கவிதைகள் நெசவு, எம்பிராய்டரி மற்றும் மட்பாண்டங்கள் போன்ற தகவல்தொடர்பு நடைமுறைகளின் பின்னணியில் மூதாதையர் அறிவைப் பரப்புவதைக் கையாளுகின்றன, வெளி நபர்கள் எளிய கைவினைப்பொருட்கள் என்று கேலி செய்கின்றனர். இங்கே இந்த கவிஞர்கள் இந்த மற்ற இலக்கிய நடைமுறைகளை நமக்கு அகரவரிசை மொழியில் மொழிபெயர்க்கிறார்கள்.
நான் டோட்டோனக்குகளைப் பற்றிப் பேசவில்லை, எனவே மானுவல் எஸ்பினோசா சைனோஸின் கவிதைகளில் மொழிபெயர்ப்பின் தலைப்பை அவரது மூதாதையர் பிரதேசத்தில் பூமியுடனான தொடர்பு மூலம் அணுகுகிறேன். நிலத்தை தொலைந்துபோன இடமாகப் பேசுவது, பாரம்பரியமாக அதைப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு அது சம்பந்தப்பட்ட நுட்பத்தை வைத்திருக்கிறது என்பதை ஒரே நேரத்தில் அடிக்கோடிட்டுக் காட்டுவதாகும். எனவே நில இழப்பு என்பது அதனுடன் இணைக்கப்பட்ட நடைமுறைகளின் இழப்பைக் குறிக்கிறது, இது நிலத்திற்கும், கடந்த, நிகழ்காலம் மற்றும் எதிர்கால மனிதர்களுக்கும் அர்த்தம் தருகிறது. நிச்சயமாக, அபியா யலா என்பது பழங்குடியினர் அல்லாத மக்கள் வசிக்கும் அதே நிலம். சைனோஸ் இங்கே நமக்கு முன்வைக்கும் இந்த பிரதேசத்தின் மறு மொழிபெயர்ப்புடன் உரையாடினால் என்ன ஆகும்? இந்த நிலங்களில் இது kuxlejal – ன் (வரலாறு / வாழ்க்கை / இருப்பு / கடந்த / நிகழ்காலம் / எதிர்காலம் என புரிந்து கொள்ளப்பட்ட) மற்றொரு வடிவமா? மாயா-கிச்சே எழுத்தாளரான மானுவல் ஜாக் புக்கப்பின் கவிதைப் படைப்பை நாம் இதேபோல் பார்க்கலாம். நகர்ப்புற மற்றும் பெருமை கொண்ட மாயா இளைஞரான கவிஞர் தனது படைப்புகளின் மூலம் பழங்குடி குழுக்களின் உறுப்பினர்களுக்கு அடிக்கடி மறுக்கப்பட்ட அகநிலைகளை மீட்டெடுக்கிறார். சைனோஸ் பூமியுடனான ஒரு சடங்கு தொடர்பை அளிக்கும்போது, ஜாக், சித்திரவதை, அழுக்கு, சிற்றின்பம், ஒளிரும் சூழலின் பின்னணியில் உயர்த்துகிறார். நகரத்தின் காலம் – இடத்துடன் உரையாடவும், அவர் முன்வைக்கும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் அதைப் புரிந்துகொள்ளவும் அவர் நம்மை அழைக்கிறார். ஒரு விதத்தில், இந்த இடைவெளிகளில் கூட “ kuxlejal” என்ற சொல் அதன் வாழ்க்கை மற்றும் வரலாறு போன்ற அர்த்தங்களில் எப்படி இருக்கிறது என்பதையும், வெவ்வேறு “அமெரிக்காக்களில்” நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது இவை ஒரே நேரத்தில் “அபியா யலா” என்பதையும் காட்டுகின்றது.
***
வாழ்க்கையின் கனவு
– டினோ சாண்டிஸ்
நான் கனவு காண விரும்புகிறேன்
நான் எழ விரும்பவில்லை
ஏனெனில், என் கனவு வாழ்க்கை
யதார்த்தத்தை விட அற்புதம்.
நான் கனவு காண்கிறேன், பச்சை வயல்வெளிகளை
நான் கனவு காண்கிறேன், உன் இருப்பின் புத்துணர்வை
நான் காண்கிறேன், உன் தோலின் நிறங்களை
நான் காண்கிறேன், உன் இதயம் பல்கிப் பெருகுவதை.
நான் எழ விரும்பவில்லை
நான் விரும்புகிறேன், உன் அருகாமையில் இருக்க.
நான் அழ விரும்பவில்லை
நான் கலைக்க விரும்பவில்லை, உன் குழந்தைத் தன்மையை…
குறிப்பு :
*இங்கு கவிஞர் ‘உன்’ (You) என்று குறிப்பிடும் வார்த்தையை முன்வைத்து, தன்முகமாகவும் புறமுகமாகவும் ஒரு மொழி விளையாட்டு விளையாடியிருக்கிறார்.
டினோ சாண்டிஸ் சியாபாஸ் மொழிக் கவிஞர், அவர் தற்போது மொழி மற்றும் கலாச்சாரம் பயிற்றுவிப்பவராக உள்ளார்.ஓவியம் மற்றும் எழுத்தறிவு பட்டறைகளில் பங்கேற்பாளராகவும், கல்வித் துறையில் பணிபுரிபவராகவும் இருக்கும் அவரது படைப்புகள் இலக்கிய இதழ்கள் மற்றும் கூட்டுத் தொகுப்புகளில் வெளிவந்துள்ளன.
***
III . புகழ் பெற்ற மாயா கவிஞர்கள்
மாயா கவிஞர்களான ஹம்பர்ட்டோ அக்பால், நெக்மா கோய் ஆகியோரின் கவிதைகளை வெளியிடுவது மிகப்பெரிய மரியாதை. ஏப்ரல் 2018 -ல் தென்னமெரிக்காவின் பொகோட்டாவில் உள்ள Pontificial பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அமெரிந்திய இலக்கியங்களின் கலாச்சார பரிவர்த்தனை நிகழ்ச்சியில் மாயா கவிஞர்களான ஹம்பர்ட்டோ அகபால் மற்றும் நெக்மா கோய் இருவரும் பங்கேற்று உரையாடினர். அந்த நிகழ்வில், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அபியா யலா முழுவதிலுமிருந்து எழுத்தாளர்கள் வந்திருந்தனர். லத்தீன் அமெரிக்க இலக்கியத்திற்கான அவர்களின் சில படைப்புகள் மொழிபெயர்ப்பாகி வெளிவந்திருப்பது பெரும் பாக்கியம். K’iche மொழியின் கவிஞரான அகபால் மற்றும் Kaqchikel மொழியின் கவிஞரான கோய் ஆகியோரின் கவிதைகள் மூலம், குவாதமாலாவில் உள்ள மாயா மொழி கவிதைகள் குறித்த ஒரு பரந்த கண்ணோட்டத்தை உணரலாம்.
ஹம்பர்ட்டோ அகபால் (Humberto Akʼabal : 1952 – 2019), குவாத்தமாலாவைச் சேர்ந்த கிச்சே மாயா கவிஞர் ஆவார். இவரது கவிதைகள் பிரஞ்சு, ஆங்கிலம், எஸ்டோனியன், ஸ்காட்ஸ், ஜெர்மன், ஜப்பானிய, டச்சு, போர்த்துகீசியம், வியட்நாமிய, ஹீப்ரு, ஹங்கேரிய, அரபு மற்றும் இத்தாலியன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பானதால், சர்வதேச அங்கீகாரம் பெற்றார். மற்றும் ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் அறியப்பட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சர்வதேச விமர்சகர்களும் படைப்பாளிகளும் இவரது கவிதைகளை, பூர்வீக பாரம்பரியத்தின் அபாரமான வெளிப்பாடு என்று பாராட்டியுள்ளனர்.
நெக்மா கோய் (Negma Coy) மாயா கக்சிகல் மொழி எழுத்தாளர், ஓவியர், நடிகை மற்றும் குவாதமாலாவைச் சேர்ந்த ஆசிரியர் ஆவார். அவர் மாயா கச்சிகல், ஸ்பானிஷ் மற்றும் மாயா எழுத்துவடிவங்களில் எழுதுகிறார். அவர் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் பல கவிதை விழாக்களில் பங்கேற்றுள்ளார். மேலும், தனது சமூகத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுடன் பணிபுரிகிறார்.
எம் குருதியின் பண்டைய பாடல்
– ஹம்பர்ட்டோ அக்பால்
நான் இந்த உலகத்தில் ஜனித்தபோது
என் தாயின் மார்பிலிருந்து ஸ்பானிஷை குடிக்கவில்லை.
என் மொழி மரங்களிடையே பிறந்தது,
பூமியின் சுவையுடன்;
எனது தாத்தாபாட்டியின் மொழி எனது வீடு,
என்னுடையதல்லாத இந்த மொழியை நான் பயன்படுத்தும்போது,
வேறொரு உலகத்திற்கான கதவுகளைத் திறக்கும்
ஒரு புதிய சாவியைப்போல உணர்கிறேன் :
வார்த்தைகளுக்கு மற்றொரு குரல் உள்ளதையும்
பூமியுடன் இணைவதற்கு மற்றொரு வழி உள்ளத்தையும்.
வலி மிகுந்த நினைவுகள் கொண்ட இந்த மொழியில்
பயமோ வலியோ இல்லாமல் பேசுகிறேன் நான்.
ஏனென்றால் என் முன்னோர்கள் அதை
தங்கள் குருதியால் வாங்கினார்கள்.
இந்தப் புதிய மொழியில்
எனது பாடலின் மலர்ச்சியை உங்களுக்குக் காட்டுகிறேன்,
நான் உங்களுக்குக் கொண்டு வருகிறேன், மற்ற துயரங்களின் சுவையை
மற்ற ஆனந்தங்களின் நிறத்தை ….
ஆயினும், இந்த மொழி இன்னும் ஒரு சாவி மட்டுமே
எம் குருதியின் பண்டைய பாடலைப் பாட.
பிற்பகல் மூடுபனி
– ஹம்பர்ட்டோ அக்பால்
இப்போதே நான் அழுது கொள்கிறேன்,
ஏனெனில், பிறகு எனக்கு நேரம் இருக்காது.
நான் இப்போது உன்னை நேசிக்கிறேன்,
ஏனெனில், நாளைய வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும்.
அந்த ஒவ்வொரு கனவையும் என்னிடம் சொல்லாதே,
முடிவில்லாதது போல.
அந்த மாயைகள் மறைகின்றன என்று என்னிடம் சொல்லாதே
பிற்பகல் மூடுபனி போல.
நான் விரும்பவில்லை, என்னிடமே நான் பொய் சொல்கிறேன் என்பதை அறிய,
மேலும், அந்த வலி என் இதயத்தில் நிலைபெறுகிறது
கொஞ்சம் கொஞ்சமாக
இது ஒன்றே நிஜம்.
கிரகணம்
– நெக்மா கோய்
நிலவுப்பாட்டி பாடுகிறாள்
வானத்தின் வயிற்றிலிருந்து
அவள் பாடுகிறாள்
வானத்தின் அடி வயிற்றில் மூழ்கி
அவள் பாடுகிறாள்
நறுமணப் புகையாய் கமழும் தாபம் மிக்க மேகங்களில்
அவள் பாடுகிறாள்
மாயா லோகத்துடன் இணைந்து
அந்த நேரம் வந்ததும்
எங்களை வசீகரித்த பாட்டி,
வலையில் சிக்குண்ட ராட்சத மீனின் பித்துடன்,
ஒவ்வொரு சொல்லையும் பாசத்துடன் பாடுகிறாள்.
அவள் மலர்த்துகிறாள், கண்களை மூடிய ஆழ்நிலையை
கம்பீரமான செயல்பாட்டின் ஒவ்வொரு தருணத்தையும் பரவசிக்கிறாள்,
அவளது கிளர்ச்சியுறும் உடல், உணர்கிறது, இடைக்கச்சை மெதுவாக அவிழ்வதை
தனது முன்னோக்கிய பாதத்தின் காலடி வீழ்ச்சியுற, நழுவுகிறது பாரம்பரிய ஆடை.
நிர்வாணத்திற்கு கீழே உயர்கிறது, அவளது மூச்சு.
அவளது பேரக்குழந்தைகள் கண்டுபிடிக்கின்றனர்
அவளது அபாரத்தை,
அவர்களின் பாட்டி நடனமாடுகிறாள் நிர்வாணமாக
தனது விழிகளை உள்நோக்கி மலர்த்தியபடி
நறுமணமலர்களை தனது அலகபாரத்தில் சொருகியபடி.
அவளது பேரக்குழந்தைகளும்
தங்களின் எண்ணங்களை மலர்த்துகிறார்கள்.
நிலவுப் பாட்டியின் அன்பு
நேசத்தை கற்றுக்கொடுக்கிறது
மற்றும் ஆனந்தமாக்குகிறது அவளது பரிசில்.
அவள் மறைந்திருக்கிறாள், மங்கியதொரு ஒளியில்,
சொர்க்கத்தின் முன்வாசலில்.
நிலவுப் பாட்டி பெருமூச்சுடன்,
தனது நீண்ட அலகபாரத்தைக் கோதியபடி,
ஒளி கொண்ட கண்களைத் திறக்கிறாள்
பாதையெங்கும் ஒளியேற்றும் பார்வையுடன்.
எங்கள் மரபின் உரிமையான அவளது பேரன்பை
வானத்தின் வயிற்றிலிருந்து ஒலிக்கும் அவள் பாடலை
நாங்கள் கண்டு பின்தொடரும் வரை.
***
IV . கவிதை பற்றிய ஒரு முன் குறிப்பு.
மானுவல் எஸ்பினோசா சைனோஸ் ( Manuel Espinosa Sainos : 1972 – ) டோட்டோனக் (Totonac) மொழிக் கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர், அத்துடன் இருமொழி தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி வர்ணனையாளர் ஆவார். 1999 ஆம் ஆண்டில் அவர் தனது முதல் கவிதைத் தொகுப்பான Xtachiwinkan likatutunaku kachikín / Voces del totonacapan, Conaculta-INI இன் Letras Indígenas Contemporáneas தொடரின் ஒரு பகுதியாக வெளியிட்டார். அவர் பல கலாச்சார வெளியீடுகள் மற்றும் புராணக்கதைகளின் வெளியீடுகளில் ஒருங்கிணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் பலமெக்ஸிக முன்னணி இலக்கிய விழாக்களில் பங்கேற்றுள்ளார்.
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஏதாவது ஒரு அம்சம் உருவகமாக அமைந்து விடும். அதுபோல இவரது தலை சிறந்த படைப்பு மற்றும் உருவக அடையாளமாக sempoalxóchitl என்னும் மலர் விளங்குகிறது. அந்த புகழ்பெற்ற கவிதை இங்கு மொழியாக்கமாகியுள்ளது.
பல்வேறு கலாச்சார மரபுகள் கொண்ட இந்தக் கவிதைகளுக்குள் நுழைய வேறொரு கலாச்சாரச் சூழலில் செயல்படும் நம் வாசக மனம், பெரிதும் சிரமப்படும் அல்லது மேலோட்டமான பயணத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. ஆகவே, கவிதையினுள் நுழைவதற்கான ஒரு சிறு காளியை உருவாக்கித் தந்தால் தமிழின் இளம் வாசகனுக்கு மேலும் உணர்வுகரமாக இருக்கும் என்பதனால் ஒரு சிறு முன் குறிப்பு.
டோட்டோனக் கவிஞரான மானுவல் எஸ்பினோசா சைனோஸ் எழுதியிருக்கும் இக்கவிதை டோட்டோனக் மக்களின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
டோட்டோனக் மக்களின் ஆன்மாவின் குரலாக ஒலிக்கும் இந்தக் கவிதையின் அடிநாதத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அந்த மக்களின் கலாச்சார வேர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். கவிதை முன்வைக்கும் காட்சிகளில் புலனாகும் தரிசனங்கள் அந்த மக்களின் பாரம்பரிய மரபின் கூறுகள்.
பொதுவாகவே, டோட்டோனக் மக்கள், இறந்த ஆன்மாக்களை பெரிதும் ஆராதிக்கிறவர்கள். தங்களது மரபான வழிபாட்டுச் சடங்குகளில் இறந்துபோன முன்னோர்களை கொண்டாடும் பலவிதமான நிகழ்வுகளை ஒவ்வொரு குழுவினரும் நடத்துகிறார்கள். இந்த ரீதியில் Papantla பகுதியின் டோட்டோனக் குழுவினரின் The Danza de los Voladores (“Dance of the Flyers”) என்னும் வழிபாட்டுச் சடங்கு மிக முக்கியமானது.
இது இன்றும் நிகழ்த்தப்படும் ஒரு பண்டைய மெசோஅமெரிக்க விழா / சடங்கு. டோட்டோனக் புராணத்தின்படி, பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான வறட்சி ஏற்பட்டது. மக்கள் வறுமையில் வாடினர். மக்கள் தெய்வங்களை அலட்சியப்படுத்தியதால், தெய்வங்கள் மழையைத் தடுத்து நிறுத்தியிருந்தன. தெய்வங்களை திருப்திப்படுத்தவும், மழையை மீண்டும் பூமிக்கு கொண்டு வரவும் இந்த சடங்கு உருவாக்கப்பட்டது. இந்த சடங்கு மழை கடவுளான Tlaloc மற்றும் பிற கடவுள்களை மகிழ்வித்தது, எனவே மழை மீண்டும் தொடங்கியது, பூமியின் வளம் திரும்பியது.
டோட்டோனக்களின் அர்த்தபூர்வமான வழிபாட்டுச் சடங்கான இது, பிற்காலங்களில் வறுமையின்றி செல்வ செழிப்பை பூமிக்குக் கொண்டு வருவதற்கான நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டது. ஸ்பானிய காலனியாக்கத்தினாலும், உள்ளூர் பூர்வகுடி மக்களின் மதமாற்றத்தினாலும் இந்தப் பாரம்பரியச் சடங்கு வழக்கொழிந்து போனதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். பார்ப்பவர்களை பிரமிப்பிலும் பீதியிலும் அப்படியே மெய்மறக்க செய்துவிடும் இந்த அந்தர ஆட்டம், பிற்கால காலனித்துவ காலத்தில் ஒரு நடனக் காட்சியாக மாறியது.
2015 -ல், உலகப்புகழ்பெற்ற மெக்சிகோ ஓவியரும் பெண்ணியவாதியுமான Frida Kahlo வின் நினைவுகூரலை முன்வைத்து இந்த நிகழ்வு லண்டனில் நிகழ்த்தப்பட்டது. Frida Kahlo வின் ஆவியை வரவழைக்கும் முகமாக, நான்கு பெண்களின் உடலில் இறங்கும் ஆவியாக ‘The Four Fridas’ என்ற நவீனக்கருத்தில் இந்த அந்தர ஆட்டத்தை வடிவமைத்து அரங்கேற்றியிருந்தனர். ஒரு பாரம்பரியச் சடங்கு நிகழ்வை, பின்நவீனத்துவப் பார்வையில் speculative fiction ஆக உருமாற்றியிருந்தது Royal Artillery Barracks என்னும் நவீன கலை அமைப்பு என்பதை இங்கு ஞாபகம் கொள்ளலாம்.
தற்போது, டோட்டோனக் மக்களிடம் சிறுசிறு எச்சங்களாக எஞ்சியுள்ள இச்சடங்கு, பல்வேறு அர்த்தங்களில் திரிந்து மாற்றியமைக்கப்பட்ட வடிவங்களில் இருந்தாலும், இதன் மையமான, இறந்து போனவர்களை தங்களது உடலுக்குள் இறக்கும் மரபான நிகழ்வு, அப்படியே மாறாதிருக்கிறது.
மேலும், Day of the Dead என்னும் இறந்தவர்களைக் கொண்டாடும் விழாவையும் இங்கு பொருத்திக் கொள்ளவேண்டும்.
லத்தீன் அமெரிக்காவின் பழங்குடி மக்களான Aztecs, Mayans, Purépecha, Nahua and Totonac போன்றவர்களிடமிருந்து தோன்றிய, இறந்தவர்களின் நாள் என்பது மெக்ஸிகன்-அமெரிக்க மக்களின் பெரும் கொண்டாட்டமாகும்.
கொலம்பிய காலத்திற்கு முந்தைய கலாச்சாரங்களிடையே இருந்து வந்த பண்டைய மரபுகளிலிருந்து உருவாக்கப்பட்டதாக்க கருதப்படும் இச்சடங்கு, இறந்தவர்களை திரும்பக் கொண்டுவரும் அர்த்தபூர்வமான நிகழ்வாகக் கொள்ளலாம். தங்களது இறந்த மூதாதையர்களின் ஆன்மாக்களை நினைவு கூறும் இச்சடங்குகள், மெசோஅமெரிக்க நாகரிகங்களின் வளர்ச்சியால் பாரம்பரிய கொண்டாட்ட விழாக்களாக இருந்து வருகின்றன.
நவம்பர் 1,2 தேதிகளில் கொண்டாடப்படும் இந்தவிழாவில், முதல்நாள் இறந்த குழந்தைகளின் நினைவாகவும், இரண்டாம் நாள், பெரியவர்களின் நினைவாகவும் கொண்டாடப்படும் தன்மையில் ஒரு காலவியல் தொன்மத்தை (Myth of the time) பின்பற்றுகின்றனர். அதாவது, டோட்டோனக் நம்பிக்கையில் தாய் தெய்வங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. புதிதாகப் பிறந்த குழந்தை இறந்தால், அதன் ஆன்மா “இறந்தவர்களின் இடமான மேற்கு நோக்கிச் செல்லாது, தாய்மார்கள் இருக்கும் கிழக்கு நோக்கி செல்லும்”. என்ற பதத்தின் அடிப்படையில் இதை உணரலாம்.
அதுமட்டுமல்லாது, மாயன் கதைகளில் பிரபலமாக பேசப்படும் மக்காச்சோள தெய்வம் குறித்து மற்ற மெக்ஸிக இனக்குழுக்களான Totonacs, Nahuas போன்றவைகளிடமும் பல்வேறுவகை கொண்ட புராணக்கதைகள் உள்ளன. இவைகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
இந்த இடத்தில் புகழ்பெற்ற புராணத் தொன்மவியல் ஆய்வாளரான லெவிஸ்ட்ராஸ் எழுதிய ‘அஸ்டிவாலின் கதை’ ஞாபகம் வருகிறது. ‘The Story of Asdiwal’ என்பது சிம்ஷியன் மக்களின் கதை – இப்போது பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடமேற்கு கடற்கரையைச் சேர்ந்த ஒரு பூர்வீக அமெரிக்க மக்கள் இவர்கள். இது சிம்ஷியன் கதைகளின் லெவி-ஸ்ட்ராஸின் செல்வாக்குமிக்க பகுப்பாய்வின் தலைப்பு.
பசிபிக் கடற்கரை நாட்டுப்புறப்பகுதிகளில் வழங்கப் பெறும் அஸ்டிவால் என்னும் வீரனின் தொன்மக் கதையை முன்வைத்து புராணக்கதை உருவாகக் காரணமான பல்வேறு நிலைகளை ஒப்பிடுகிறார் லெவிஸ்ட்ராஸ். நிலவியல், பொருளியல், சமூகவியல் நோக்கில் பல்வேறு சாத்தியங்களை முன்வைக்கிறது ஆய்வு. புராணக்கதைச் சிந்தனையின் அடிப்படைத்தன்மை மாற்றம் பெறும்பொழுதும் சிதையும் பொழுதும், புராணம், மனிதகுல வரலாற்றின் தன்மைகளை குழப்பம் மிக்கதாக மாற்றிவிடுகிற நிலையையும் அதை தீர்க்கும் தன்மைகளையும் விரிவாக எடுத்துரைக்கிறார் ஆய்வாளர்.
இந்த இறந்தவர்களின் கொண்டாட்ட விழாவில், கல்லறைகளுக்குப்போவதிலிருந்து, வீட்டிலேயே பீடங்கள் (Altars) அமைத்து வழிபடுவது வரையிலான நிகழ்வுகளில், டோட்டோனக் கலாச்சாரத்தில், மிக முக்கிய பங்கு வகிப்பது sempoalxóchitl என்னும் மலர்கள்! இவை இறந்தவர்களுக்குப் பிரீதியானவை.
இந்த மலர்கள் இறந்தவர்களின் ஆன்மாக்களை ஈர்க்கும் என்னும் தொன்மம் பிரமாதமானது. இந்தமலரின் நறுமணமும், பிரகாசமான இதழ்களும் இறந்த ஆன்மாக்களை வசீகரித்து கல்லறைகளிலிருந்து தங்களின் வாழ்வியலுக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையில் மலர்கிறது இக்கவிதை!
இறந்தவர்கள் காதல் பற்றிப் பேசுகிறார்கள்
– மானுவல் எஸ்பினோசா சைனோஸ்
இறந்தவர்கள் காதல் பற்றிப் பேசுகிறார்கள்
அவர்களின் சதையை உண்டு எழும் மரங்களும்
sempoalxóchitl மலர்களால் அபிஷேகம் செய்யப்பட சிலுவைகளும்
ஆயிரங்கதைகளைச் சொல்கின்றன.
அவர்கள் *இரகசிய திருமணச் சங்கங்களைப் பற்றி பேசுகிறார்கள்
உள்நாட்டில் தங்களை வெளியேற்றும் ஆறுகள் பற்றி,
கடலில் தங்களை ஒப்படைக்கும் நதிகளைப் பற்றி.
இறந்தவர்கள் காதல் பற்றி பேசுகிறார்கள்
அவர்களது இதயங்கள் ஒருபோதும் இறக்காது,
பிளம்பழங்களின் செந்நிறக் குருதியை உந்தி
பூமியில் துடிக்கும்
காதல் ஒரு வற்றாத ஜீவன்.
இறந்தவர்கள் காதல் பற்றி பேசுகிறார்கள்
அவர்களின் தாபங்கள் சுற்றித் திரிகின்றன
கல்லறைகளில் கமழ்கின்றது பாலியல் வாசம்.
காப்பித்தோட்டங்கள், பள்ளத்தாக்குகள், வாழைத் தோப்புகளின் ஈரப்பதத்தில்,
முத்தங்கள் ஆவியாகின்றன.
இறந்தவர்கள் காதல் பற்றி பேசுகிறார்கள்
அன்பு கெழுமிய அரவணைப்புகளை நிகழ்த்துகிறார்கள்
sempoalxóchitl மலர்கள் சார்த்திய பலிபீடங்களில்.
இறந்தவர்கள் காதல் பற்றி பேசுகிறார்கள்,
அந்த நினைவுகளை மலர் மாலைகளாக அணிந்து
இறந்தவர்கள்
மறக்கமுடியாத, மரணமடையாதவர்களாக மாறுகிறார்கள்.
குறிப்பு :
*ரகசிய திருமணங்கள் என்பது ஒருவரின் பெற்றோர் மற்றும் (மதரீதியாக) கடவுளின் ஒப்புதலை தேவையற்றதாக ஆக்கியது. சடங்குகள் சம்பிரதாயங்கள் அற்ற இந்த முறைசாரா திருமணங்களும், இந்த செயல்பாடுகளுக்கான சங்கங்களும் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகியவை.
***
V . ஜோட்ஸில் – ஒரு அறிமுகம்
ஜோட்ஸில் (Tzotzil) மொழிக் கவிஞரான, என்ரிக்வெட்டா லூனஸ், மெக்சிகோ மாநிலமான சியாபாஸில் உள்ள சான் ஜுவான் சாமுலா என்னும் நகரத்தில் பிறந்தவர். கவிதைக்கான அவரது பாதை, அவர் பிறந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள சினலோவா மாநிலத்தில் தொடங்கியது. அவரது கவிதைகள் இத்தாலியன், ஜெர்மன், ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் செர்பியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தெற்கு மெக்ஸிகோவில் உள்ள மத்திய சியாபாஸ் மலைப்பகுதிகளில் உள்ள பூர்வீக மாயா மக்கள் Tzotzil மொழியை பூர்விகமாகக் கொண்டவர்கள். தற்காலத்தில் ஜோட்ஸில் மக்கள் தங்களின் மொழியை Bats’i k’op என்று குறிப்பிடுகிறார், அதாவது “உண்மையான சொல்” என்று பொருள். மொழியியல் மற்றும் தொல்பொருள் தரவுகளின் அடிப்படையில், ஜோட்ஸில் மக்களின் மூதாதையர்கள் 100 BCE முதல் 300 CE வரை சியாபாஸில் நுழைந்ததாக ஆய்வியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பண்டைய புராண ஜோட்ஸில், உலகை ஒரு சதுரமாகக் கருதுகிறார், அதன் நான்கு மூலைகளிலும், பண்டைய மாயாவின் கடவுள்கள் உள்ளனர். மனிதகுலத்தை உருவாக்கும் முயற்சிகளின் போது தெய்வங்களால் உருவாக்கப்பட்ட குள்ளர்கள் இனம் வசிக்கும் ஜோட்ஸில் பாதாள உலகம். ஒரு பாதாள உலகத்தில் வசிக்கும் இனமாக இந்த மக்கள் உருவாகினர் என்கிற தொன்மக்கதை உடையவர்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு ஆன்மாக்கள் உள்ளதாக சொல்கிறது இவர்களின் தொன்மம், ch’ulel மற்றும் wayhel. சுலேல் என்பது, தன்னுள் இருக்கும் தனிப்பட்ட ஒரு ஆன்மா, அது, இதயம் மற்றும் இரத்தத்தில் அமைந்துள்ளது, இது ஒரு குழந்தை கருவில் இருக்கும்போதே தங்களது மூதாதைக் கடவுள்களால் உருவாக்கப்படுகிறது. மற்ற ஆன்மா, வேஹெல், ஒரு விலங்கு – ஆவி துணை கொண்டது. அதனுடைய ஆவி, ஒரு காட்டு விலங்குடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நபரின் வாழ்நாள் முழுவதும், விலங்கு ஆவிக்கு என்ன நேர்ந்தாலும் அந்த நபருக்கும் அதேபோல நடக்கும். (போர்ச்சுக்கல் எழுத்தாளரான Rui Manuel Amaral எழுதியுள்ள Almost ten stories என்ற சிறுகதையில் ‘இரண்டு இதயங்களைக்கொண்ட மனிதன்’ என்று ஒரு சிறு துண்டை எழுதியுள்ளதை வாசிக்கலாம்)
இதுபோன்ற மாந்த்ரீக யதார்த்தம் கொண்ட தொன்மங்கள் நிரம்பிய மாயா மக்களான இவர்கள், எண்ணற்ற கடவுள்களை வழிபடுபவர்களாக உள்ளனர். பிரதானமாக இயற்கையை வணங்குகின்றனர். சூரியனை தந்தையாகவும், சந்திரனை தாயாகவும் மற்றும் ஆறுகளுக்கும், நீரூற்றுகளுக்கும், உயரமான மலைகளுக்கும் தூபமேற்றுகிறார்கள்.
சமீப காலமாக, 1980 களில் காபி விலை வீழ்ச்சியடைந்த நிலையில், மலைப்பகுதிகளில் பலருக்கும் நிலையான வேலைவாய்ப்பு கிடைப்பது கடினமாகியுள்ளது. மக்கள் தொகை மற்றும் வெளிநாட்டு சுற்றுலா ஆகிய இரண்டும் உயர்ந்துள்ளதால், கைவினைப் பொருட்களின் விற்பனை மற்ற பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பதிலாக அமைந்துள்ளது. இந்த மக்கள் சமீபத்தில், சியாபாஸின் மலைப்பகுதிகளில் இருந்து மெக்ஸிகோவின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்வு மற்றும் அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றம் ஆகியவை வாழ்வாதார விவசாயம் மற்றும் மோசமான ஊதியங்களிலிருந்து விலகுவதற்கான ஒரு வழியைக் கண்டறிந்துள்ளனர்.
என் கால்களுக்கு இடையில்
– என்ரிக்வெட்டா லூனஸ்
என் கால்களுக்கு இடையில்
நான் ஒரு துளி இரவை மறைக்கிறேன்
என் கன்னத்திலும் தோளிலும்
அது மின்மினிப் பூச்சிகளாய் மினுக்குகிறது,
அது, மூன்று காதலர்களின் நிழல்கள்,
ஒரு அடையாளக் குறி,
இருளைக் கொண்டுவரும் என்று என்னால் நம்பமுடியவில்லை
ஆனால் இப்போது என் மச்சம்
ஒரு மார்பில் மறைக்கப்பட்டுள்ளது. *
குறிப்பு :
*ஒரு பெண்ணின் உடலில் ஒரு குறிப்பிட்ட மச்சம் காணப்பட்டால், அவளுடைய காதலன் அல்லது கணவனுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது சோட்ஸில் மக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையும், அந்த குறிப்பிட்ட அடையாளக் குறி பற்றிய தொன்மமும் பயன்பாட்டில் இருந்து மறைந்து வருகிறது.
***
நிலவின் வேர்கள்
– என்ரிக்வெட்டா லூனஸ்
அம்மா, எனக்கு உங்கள் கண்கள் வேண்டும்
எங்கள் கொடுமைகளைக் காண.
எனக்கு உங்கள் வாய் வேண்டும்
என் தந்தையின் பெயரை பகல் வெளியில் கத்த.
எனக்கு உங்கள் கைகள் வேண்டும்,
சோள மாவைப் பிசைய, நெருப்பைக் கிளற, சிலுவை அடையாளம் போட.
எனக்கு உங்கள் கால்கள் வேண்டும்,
சோள வயல்களில் நடந்து செல்ல, எங்கள் இறந்தவர்களைப் பார்த்து நடனமாட.
என் அம்மா, இது மிக அவசரம், எனக்கு உங்கள் கண்கள், வாய், கைகள் மற்றும் கால்கள் வேண்டும்
எனவே நான் என்றும் மறக்கமாட்டேன், நாம் நிலவின் வேர்களை.
***
VI பன்முக கலாச்சார அடையாளங்களை மீட்டெடுப்பதே எம் கவிதை
நாங்கள் பூர்வகுடி இலக்கியங்களை உருவாக்குவது நாட்டுப்புறக் கதைகளாகவோ அல்லது கடந்து செல்லும் பாணியாகவோ அல்ல; இவை ஒரு இனத்தின் அடையாளங்கள், நாகரிகங்கள், மொழிகள், ஆயிரக்கணக்கான குரல்கள் மற்றும் வற்றாத ஆவிகள் பற்றிய உரையாடலாகும்” என்று சொல்லும் மசாடெக் (Mazatec) கவிஞரான யுவான் கிரிகோரியோ ரெஜினோ (Juan Gregorio Regino : 1962 – ) மெஸோஅமெரிக்க பூர்வீக மொழிகளின் முன்னணி கவிஞர்களில் ஒருவர். மேலும், இனவியல் தொடர்பான இளங்கலை பட்டத்தையும், சமூக மானுடவியலில் ஆராய்ச்சி மற்றும் பட்டதாரி ஆய்வுகள் மையத்திலிருந்து இரண்டாவது பட்டத்தையும் பெற்றவர். 1990 களில் சுதேச மொழிகளில் எழுத்தாளர்கள் மையத்தின் தலைவராக இருந்தார். ரெஜினோவின் பணி இரண்டு தனித்துவமான பாதைகளைப் பின்பற்றுகிறது. ஒன்று சமகால நவீன இலக்கியம், மற்றொன்று மெசோஅமெரிக்க உலகின் நெருக்கமான சமகால இலக்கியம்.
“மெக்ஸிகோ பன்முக கலாச்சார மாநிலமாக இருந்தாலும், மாநிலத்தின் கொள்கை எப்போதும் ஒற்றை மொழி வாதமாக உள்ளது” என்று கண்டிக்கும் இவர், “இன்று நாங்கள் இரண்டு குரல்களில் பாடுகிறோம், இரண்டு நாவுகளில் விசிலடிக்கிறோம் என்று சொல்லலாம். எங்கள் பூமியின் மொழியை நாங்கள் நம்புகிறோம், கடலின் மறுபக்கத்திலிருந்து வந்த மொழியை நாங்கள் நம்புகிறோம், சூரியனின் உலகளாவிய மொழியை நாங்கள் நம்புகிறோம். எங்கள் அடையாளம் கழுகு, பாம்பு, மற்றும் கிரீடம். மேலும் எங்கள் அரிய செல்வம் என்பது எங்கள் மொழிகள் என்று எங்கள் திரண்ட செல்வம் மொழிகள்..” என்று முழங்கும் இவர், மெக்சிக மொழிகளின் அகாடமி உறுப்பினராகவும், தேசிய பூர்வகுடி மொழிகளின் நிறுவனத்தின் (INALI) இயக்குநராகவும் உள்ளார். லத்தீன் அமெரிக்கா முழுவதும் – ஆதிக்கம் செலுத்தும் ஸ்பானியர்களுடன் இணைந்து பூர்வீக மொழிகளைப் பயன்படுத்தி புதிய இலக்கியங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இவரது கவிதைப் போக்கு, பூர்வகுடிகளின் பரந்த ஆவிகளின் குறியீட்டு உலகத்தையும், மசாடெக் மொழி மற்றும் கலாச்சாரத்தின் ஒலியையும் பார்வையிடுகின்றன.
நாங்கள் இனப்படுகொலையில் இருந்து தப்பித்திருக்கிறோம், வெளிநாட்டு புத்தகங்களுடன் எங்கள் மனதை எழுதவும் வளர்க்கவும் கற்றுக்கொண்டோம். ஒற்றை கருத்தாக்கத்தின் கீழ் போர்வை செய்யப்படும் மெக்ஸிக தன்மையை, லாகுய்லோஸ் (tlacuilos – மெசோஅமெரிக்காவின் பன்முக கலாச்சார அடையாளங்களை வரைந்த பண்டைய ஓவியர்) பாரம்பரியத்தின் வாயிலாக, இன்று நாங்கள் மீட்டெடுக்கிறோம்..” என்று அறைகூவல் விடுக்கிறார் இவர்.
மரணம் நித்தியமானது அல்ல
– யுவான் கிரிகோரியோ ரெஜினோ
மரணம் நித்தியமானது அல்ல,
ஓ வானத்திலிருந்து இறங்கும் என் ஆவிகளே
பூரணமற்ற வாழ்க்கையிலிருந்து விடை பெற்றுவிட்ட
உங்கள் இருப்பை இங்கே உணர்கிறேன்
மேலும் இறந்தவர்களுக்கொரு வாழ்வு உண்டு என்பதையும்.
நாங்கள் கேளிக்கையில் வாழ்கிறோம்,
மரணத்தின் ஒரு தற்காலிக தப்பிப்பாக
வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு கணத்தில்.
வாருங்கள், எங்களுடன் இருக்கையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,
எங்கள் பழச் சாற்றை அருந்துங்கள்,
பின்னர், ஒவ்வொரு முகமூடியிலும் மறைந்திருக்கும்
மரணத்துடன் நடனமாடுவோம்.
இது எங்கள் கேளிக்கை விழா
வாழும் ஆவிகளுடனும்,
இறந்த ஆவிகளுடனுமான
நம் உலகங்களை ஒன்றிணைப்போம்.
எங்களுக்கு ஒரு இதயம் இருக்கிறது, உங்களுக்கும்தான்.
இந்த வாழ்க்கையில்,
இது நித்தியமானது அல்ல;
இந்த மரணத்தில்,
இது நித்தியமானது அல்ல.
பாடல் தொடங்குகிறது
– யுவான் கிரிகோரியோ ரெஜினோ
நான் தந்தைக் கடவுளோடும், தாய்க் கடவுளோடும் இங்கு வருகிறேன்,
ஏழு காற்றைக் கடந்து,
சொர்க்கத்தின் ஏழு நிலைகளைத் தாண்டி.
பாதாள உலகத்தின் ஏழு முகங்களை மீறி.
ஏனெனில், இரவை அவதானிக்கும் என் கண்கள்,
மர்மத்தைத் திறக்க போதுமான ஒளி கொண்டவை.
ஏனெனில், நான் அவரது வார்த்தைக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு தூதர்,
ஆன்மாவை கண்காணிக்கக்கூடிய பாடகர்.
தூய்மையான வீட்டில்
நான் எனது இருப்பைச் சோதிக்க வருகிறேன்,
ரகசியங்களை வெளிச்சமிடவும்.
நான் வார்த்தையைத் தேட வருகிறேன்,
புத்துணர்ச்சி மிகுந்த, சுத்தமான பாதையையும்.
நான் வாழ்வியலின் தீர்க்கதரிசனம் சொல்லும் பறவை,
அடிவானத்தைத் திறக்கும் காலை நட்சத்திரம்,
நிலவைக் கிசுகிசுக்கும் சில் வண்டு,
மலையை குணப்படுத்தும் மூடுபனி.
***
VII . A literary game
இந்தக்கவிதையின் தலைப்பை மூல மொழியான மபுச்சே வில் இருப்பது போலவே அசலாக வெளியிட்டிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். ஏன் Dream என்று மொழிபெயர்க்கவில்லை? இந்தக் கவிதையில் ஏன் நரி உள்ளே நுழைந்தது? மபுச்சே மொழிமரபுக்கும் நரிக்குமான தொன்மை நிறைந்த தொடர்புக் கண்ணி எது? அது எங்கு அறுபட்டது? என்பதையெல்லாம் முன்வைத்து ஒரு இலக்கிய ஆட்டம் (literary game) ஆடுவதற்காக இதை சீரிய தேடல் உணர்வு கொண்ட வாசகர்களுக்கு முன்வைக்கிறேன்.
மபுச்சே (Mapuche) மொழிக் கவிதைகளில் லியோனல் லியன்லாஃப் (Leonel Lienlaf) ஒரு முக்கியமான கவிஞராக உள்ளார், இவர் எழுத்து மட்டுமல்லாது, பாரம்பரிய மபுச்சே பாடல்களிலும் கவனம் செலுத்துகிறார். அவர் தனது படைப்புகளை முதல் கட்டமாக மபுச்சே மொழியில் எழுதி பிறகு ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்கிறார். அவரது கவிதை தொகுப்புகள் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளன.
Pewma (கனவு)
– லியோனல் லியன்லாஃப்
நேற்று இரவு என் கனவுகளில்
ஒரு நரி
என் வீட்டின் கீழ் பாடிக்கொண்டிருந்தது
இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
என் குரல் அதனிடம் கேட்டது
அது முகத்தை என்னிடமிருந்து மறைத்தது
தனது பாடலின் பின்னால்.
ஏன் மறைக்கிறாய்?
நான், என் படுக்கையில் இருந்து கத்தினேன்
வாஹ் வாஹ்
என்பதே அதன் பதில்.
நான் சடக்கென விழித்தெழுந்து
வெளியே வந்தேன்
அன்றைய நாள், தன்னை வரையத் தொடங்கியிருந்தது.
தொலைவில் நான் கேட்டேன்
ஒரு நரியின் அழுகை போல
மலைகளிலிருந்து ஒலிக்கும் ஊளையை.
Kürüf (காற்று)
– லியோனல் லியன்லாஃப்
வெட்டப்பட்ட காடுகளுக்கு மேல்
மிக்க வேதனையுடன்
சுழல்கிறது காற்று;
தூசி தும்புகளும் சாம்பலும் கொண்ட
பறவைகளின் கனவுகள் படிந்த
கூடுகளைக் கலைத்தெறிகிறதுகாற்று
பாறைகளின் மத்தியில் வெறியுடன் அலைகிறது
ஏனெனில் அதன் செவிகள்
இனி கேட்க முடியாது
மரங்களின் மென்மையான பாடலை.
*************
(2020 ஜனவரி மாத உயிர்மை இதழில் வெளிவந்தது)
